Abstract:
றிவியல் விதிகளும் எண்ணக்கருக்களும் திடீரென ஸ்தாபிதமானவை அன்று. தொடர்ச்சியான அவதானிப்புக்களின் வழியே உருவான கருதுகோள்களும் அவற்றின் வழியே நிகழ்ந்த பரிசோதனைமுறைகளும் வாய்ப்புப் பார்த்தல்களுமெனப் பல்வேறு தளமாற்றங்களுக்குட்பட்டே அவை ஸ்தாபிக்கப்படுகின்றன. இவற்றின் பின்னால் உலகவரலாற்றில் ஆதிநாகரிகங்கள் பலவற்றின் சிந்தனாநுட்பங்களும், பிரயோகஞானமும் கையளிப்புப் பாரம்பரியமும் ஊடுபாவாய் பின்னப்பட்டுள்ளன. இவ் வகையில் அறிவியலின் வரலாறு மிகநீண்டது. அது குறித்த ஒரு சில பண்பாடுகளுக்கு மட்டுமே ஏகபோகவுரிமையுடைய ஒன்றன்று. சில அறிவியற் கருத்தாக்கங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பண்பாட்டுப் புலங்களில் சமாந்தரமாக வளர்ச்சி பெற்றிருப்பதும் சாத்தியமானதேயாகும். ஆயினும் அறிவியலின் வரலாற்றில் கணிதம், வானியல், மருத்துவவியல், இரசாயனவியல் போன்ற அறிவுப்புலங்களின் பிதாமகர்களாக கிரேக்கர்களையும் சில நிலைகளில் பாரசீக மற்றும் அரேபியர்களையும் கருதி வருகின்ற போக்கே காலம் காலமாக இருந்து வந்துள்ளது. உலகின் தொன்மையான நாகரிகங்களில் ஒன்றாகிய இந்து நாகரிகமும் பலநிலைகளில் உலக அறிவியலின் வரலாற்றில் பங்களிப்பை நல்கியிருக்கிறது. குறிப்பாக கேத்திரகணிதம், திரிகோணகணிதம், எண்கணிதம், வானியல், அணுவியல், மருத்துவவியல் ஆகிய அறிவியற்புலங்களில் இந்துக்களின் வகிபங்கு காத்திரமானதாக இருந்துள்ளது. பைதகரஸ் தேற்றம், பதின்மஎண்கள், பூச்சியம் தொடர்பான கணிதவிதிகள் 'π'யின் பெறுமானம், திரிகோணகணிதவியல், அணுக்கொள்கை, ஷஷட யோபன்டைன் எனப்படும் முடிவுபெறாச் சமன்பாடுகளைத் தீர்க்கும் முறைகள், கிரகணங்கள் உருவாவதற்கான காரணம் என பல்வேறுபட்ட அறிவியல் சார்ந்த கருத்தாக்கங்களில் இந்துக்களின் வகிபங்கானது முன்னோடியாக கருதப்படத்தக்கது. இதனை வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையிலும் நிரூபிக்க இயலும். ஆயினும் துரதிஷ்டவசமாக உலக அறிவியலின் வரலாற்றில் இந்துக்களின் வகிபங்கு குறித்துத் தெளிவான கருத்தாடல்கள் இடம்பெறவில்லை. மாறாக இந்துக்களால் கண்டறியப்பட்ட பல அறிவியற் கருத்தாக்கங்கள் கிரேக்க, பாரசீக, அரேபிய, பண்பாட்டின் வழிவந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தகைய முற்கற்பிதங்கள் மறு வாசிப்புச் செய்யப்படவேண்டியதன் அவசியத்தினை இக்கட்டுரையானது சுட்டிக்காட்ட முயல்கிறது.