Abstract:
'தொடர்பாடல்' என்பது உலகில் உயிரினங்கள் தோன்றியது முதல் காணப்படும் ஒரு தேவைப்பாடாகும். ஒருவர் தனது சிந்தனை, எண்ணம், உணர்வுநிலை, மனநிலை மற்றும் கருத்துக்கள் போன்றவற்றைப் பிறரிடம் எடுத்துக் கூறும் செயற்பாடு தொடர்பாடல் ஆகும். உலகில் வாழும் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். அவரவர் தத்தம் அரசியல், சமூகம், பண்பாடு, அறிவு, ஆளுமை, வயது முதிர்ச்சி மற்றும் அனுபவம் போன்றவற்றை கைக்கொண்டு தனித்துவமான முறையிலே தொடர்பாடலை மேற்கொள்கின்றனர். மெசியாவாக, மானிடமகனாகப் பிறப்பெய்திய இயேசுவும் தான் வாழ்ந்த அரசியல், சமூக, பண்பாட்டுச் சூழலிலே தன்னை மெசியாவாக நிரூபிப்பதற்கும், தான் உலகிற்கு வந்த காரணத்தை எடுத்தரைப்பதற்கும், மண்ணுலகில் இறையரசைக் கட்டியெழுப்புவதற்கும் பல்வேறு தனித்துவமான தொடர்பாடல் உத்திகளைக் கையாண்டுள்ளார். இன்றைய நவீன யுகத்தில் ஒருவர் வெற்றியாளராய்த் திகழ முறையான, தர்க்கரீதியான தொடர்பாடல் உத்திகளைக் கடைப்பிடிப்பவராக இருக்க வேண்டும். அந்த வகையில் புதியதோர் கிறிஸ்தவ மனிதநேயப் பண்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கு வழிகாட்டும் இயேசுவின் தொடர்பாடல் உத்திளைக் கண்டறிய வேண்டியது காலத்தின் தேவையாகும். அந்தவகையில் இயேசு கையாண்ட தொடர்பாடல் உத்திகளைக் கண்டறிவதே இந்த ஆய்வின் பிரதானமான நோக்கமாகும். இயேசுவின் வாழ்வைத் தனித்துவமாகக் கூறுகின்ற யோவான் நற்செய்தியை ஆய்வு மூலமாகக் கொண்டு இந்த ஆய்வு கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் இரண்டாம் நிலைத் தரவுகளாக இந்த ஆய்வுத் தலைப்புடன் தொடர்புடைய நூல்கள், ஆய்வு நூல்கள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் போன்றன எடுத்தாளப்பட்டுள்ளன. இந்த ஆய்வானது விபரண ஆய்வு, பகுப்பாய்வு போன்ற ஆய்வு முறையியல்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது, குறிப்பாக யோவான் நற்செய்தியில் மறைந்துகிடக்கும் இயேசு கையாண்ட தொடர்பாடல் உத்திகளை வெளிக்கொணர்வதற்கு பகுப்பாய்வு முறையியலும், அவரின் தொடர்பாடல் சிந்தனைகளை விபரிப்பதற்கு விபரண ஆய்வு முறையியலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய ஆய்வுகள் வெற்றிகரமான தொடர்பாடல் உத்திகளை இனங்காண உதவுவதோடு, இயேசு கையாண்ட தொடர்பாடல் உத்திகள் மூலம் வெளிப்படும் அவரது எண்ணப்பாங்கு, மனநிலை, சமயோசிதம் போன்ற பண்புகளைப் பட்டியற்படுத்தவும் முடியும். இத்தகைய ஆய்வுகள் மூலம் உலகப் பொதுமையாகக் கருதப்படும் 'தொடர்பாடல்' பற்றிய சிந்தனைப் போக்கு விவிலியத்திற்கும் பொருந்தி வரும் உண்மை வெளிக்கொணரப்படுவதோடு, நற்செய்திகளில் பொதிந்துகிடக்கும் ஆழமான அறிவார்ந்த தொடர்பாடல் சிந்தனைகளை வெளிக்கொணர முடியும் எனலாம்.