Abstract:
மக்களின் குரல் பத்திரிகை! பத்திரிகையின் குரல் ஆசிரியத்தலையங்கம்! இதன் அடிப்படையில் பத்திரிகையின் உயிர் நாடியாக இருப்பது ஆசிரியத்தலையங்கம். ஆசிரியத்தலையங்கங்கள் எப்போதும் சமகாலப்பிரச்சினைகளையும், சமூதாயப் சீர்கேடுகளையும் சர்ச்சைக்குரிய நாட்டு நடப்புக்களையும் ஆராய்ந்து அது தொடர்பாக பத்திரிகையின் கருத்தினை மற்றும் எண்ணப்பாங்கினையும் வெளிப்படுத்துகின்றன. மும்மொழியிலான பத்திரிகைகளின் ஆசிரியத்தலையங்கங்களுக்கும் இடையிலான ஒப்புமைகளையும், தனித்துவங்களையும் கண்டறிவதோடு அவை தாம் எடுத்தாளும் பொருளினை எவ்வாறு வெளிப்படுத்துகின்றன என்பதினை கண்டறிவதே இவ் ஆய்வின் பிரதானமான நோக்கமாகும். இந்த ஆய்வின் விடய எல்லையாக இலங்கையிலிருந்து வெளிவருகின்ற மும்மொழிகளிலான தினசரிப் பத்திரிகைகளின் ஆசிரியத் தலையங்கங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.அது போன்று இவ் ஆய்வு மார்கழி 2014 – மாசி 2015ஆம் ஆண்டு வரையான மூன்று மாத கால எல்லையினை கொண்டு அமைகின்றது. இந்த ஆய்வின் முதலாம் நிலைத் தரவுகளாக குறிப்பிட்ட மூன்று மாதங்களில் வெளிவந்த ஆசிரியத்தலையங்கங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதோடு இரண்டாம் நிலைத்தரவுகளாக இவ் ஆய்வுப் பொருண்மையோடு தொடர்புடைய கட்டுரைகளும், ஆய்வுக்கட்டுரைகளும் நூல்கள் மற்றும் ஆய்வு நூல்கள் போன்றன எடுத்தாளப்பட்டுள்ளன. இந்த ஆய்வானது ஆசிரியத் தலையங்கங்களின் பண்பினை அடிப்படையாக கொண்டு மேற்கொள்வதினால் ஒப்பிட்டாய்வு மற்றும் பகுப்பாய்வு முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு பத்திரிகையின் நோக்கத்தையும், பின்னணியையும், பணியினையும் அதன் ஆசிரியத் தலையங்கம் விளக்குவதினால், ஆசிரியத் தலையங்கம் மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகின்றது. அந்த வகையில் இலங்கையிலிருந்து வெளிவருகின்ற மும்மொழிகளிலான தினசரிப் பத்திரிகைகளின் ஆசிரியத் தலையங்கங்கள் தத்தம் தனித்துவத்தினை பேணும் வகையில் பல்வேறுபட்ட பண்புகளைக்கொண்டும், உத்தி முறைகளை பயன்படுத்தியும் வெளிவருகின்றன என்பதே இந்த ஆய்வின் கருதுகோள்ளாகும். ஆசிரியத் தலையங்கங்கள் பல்வேறு பேசு பெருளினை கொண்டு காணப்பட்டாலும் அது வெளிப்படுத்தும் விதத்திலேயே அதன் வெற்றி தங்கியுள்ளது. ஒவ்வொரு பத்திரிகையும் தமது ஆசிரியத் தலையங்கங்கள் ஊடாக தத்தம் சமூகத்துக்கு காத்திரமான பணிகளையும், பங்களிப்பினையும் செய்கின்றன. அந்த வகையில் ஆசிரியத்தலையங்கம் தொடர்பான ஆய்வுகள் காலத்தின் தேவையாகும்.