Abstract:
திருக்குறளின் கருத்துவளம் காரணமாக அதற்குப் பல்வேறு உரைகள்
தோன்றியுள்ளன. உரை எழுதுவது என்பது வெறும் பொருள் விளக்கம் மட்டுமல்ல. அது குறளின் உள்ளார்ந்த தத்துவம், சமூக நோக்கம், மனிதநேயப் பார்வை ஆகியவற்றைக் காலச் சூழலோடு வெளிப்படுத்தும் அறிவார்ந்த செயலாகும். பழைய உரையாசிரியர்களின் உரைகள் இலக்கண விளக்கம், சொற்பொருள் விரிவாக்கல், சமய தத்துவ விளக்கம் என்பவற்றை மையமாகக் கொண்டிருந்தன. காலம் மாற சமூகச் சூழலும் அரசியல் நிலையும் மாற்றம் கண்டது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந்திய சமூகத்தில் தேசிய விழிப்புணர்வு, சுதந்திர உணர்வு, சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் தீவிரமடைந்தன. இத்தகைய சூழலில் இலக்கியங்கள் புதிய கோணத்தில் அணுகப்பட்டன.திருக்குறளையும் சமகாலப்பிரச்சினையோடு இணைத்து உரைகாணத் தொடங்கினர். இத்தகைய புதிய அணுகுமுறையின் முக்கிய ஆளுமையாக வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள் திகழ்கின்றார். இவர் சுதந்திரப் போராட்ட வீரராக மட்டுமன்றி சிறந்த அறிஞராகவும் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார். இதனால் இவரது உரையில் இலக்கிய நயம், அரசியல் விழிப்புணர்வு, சமூக நீதிக் கருத்துக்கள் இயல்பாகக் கலந்துள்ளன. இவரது திருக்குறள் உரைத்திறனை ஆய்வு செய்வதனூடு திருக்குறள் உரை மரபின் வளர்ச்சியையும் தேசியச் சிந்தனையும் தமிழ்ச்சிந்தனையும் இணையும் தன்மையையும் விளங்கிக் கொள்ள முடியும். வ.உ.சி அவர்களின் திருக்குறள் உரையின் தன்மையையும் சிறப்பையும் ஆராய்வதோடு திருக்குறள் ஒரு இலக்கிய நூலாக மட்டுமன்றி சமூக மாற்றத்திற்கான சிந்தனை நூலாகவும் விளங்குகிறது என்பதையும் அந்தப்பார்வையை வளர்த்தெடுத்தவர்களில் வ.உ.சி. அவர்களின் பங்கு எத்தகையது என்பதையும் ஆராயும் முயற்சியாக இவ்வாய்வு அமைகிறது. விவரண மற்றும் பகுப்பாய்வின் அடிப்படையில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்படுகிறது.