Abstract:
தமிழ் இலக்கியம், தமிழர் கல்வி, தமிழர் வரலாறு, தமிழர் அறம் முதலான துறைகளில் பணியாற்றிய இலக்கிய கர்த்தாக்கள் குறித்த ஆய்வுகள் காலத்துக்குக் காலம் பலராலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்கள் குறித்த ஆய்வுகள் மேற்கூறப்பட்ட துறைகளில் பணியாற்றிய ஆளுமைகளின் படைப்பிலக்கியம் சார்ந்தே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றைத் தாண்டி இவ்வாறான இலக்கிய கர்த்தாக்களின் ஆக்கங்கள் அக்காலத்து மொழி, கல்வி, இலக்கியம், சமூகம், அவர்களது படைப்பிலக்கியம் முதலான துறைகளின் வரலாறாகவும் அமைந்து விடுகின்றன. அந்தவகையில் வ.உ.சி தமிழ்ப்புலமை மரபின் முக்கிய இலக்கிய கர்த்தாக்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றார். இவர் சுதந்திரப் போராட்ட வீரர், நூலாசிரியர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர், படைப்பிலக்கியவாதி, அரசியல்வாதி என இலக்கிய உலகில் பல துறைகளில் பணியாற்றியுள்ளார். இவரது படைப்புக்களை நுணுகி நோக்கும் போது தனித்துவமான இரு அம்சங்கள் முனைப்புற்று நிற்பதனை இனங்காணலாம். ஒன்று அவரது ஆராய்ச்சி மனப்பான்மை மற்றையது அவற்றுள் காணப்படும் எளிமைத்தன்மை என்பனவாகும். அந்தவகையில் இந்த ஆய்வானது வ.உ.சியினுடைய மெய்யறம் தமிழர் வாழ்வியலில் எவ்வளவு தூரம் செல்வாக்குப் பெற்றுள்ளது என்பதை வெளிக்கொணரும் விதமாக அமையப்பெற்றுள்ளது. திருக்குறளில் கூறப்பட்ட அறக்கருத்துக்கள் வ.உ.சியின் மெய்யறத்தில் எவ்வாறான தாக்கத்தைச் செலுத்தியுள்ளன என்பதனை வெளிக்கொண்டு வருவதே இந்த ஆய்வின் நோக்கமாகும். விபரண மற்றும் பகுப்பாய்வு, திறனாய்வு முறைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.