Abstract:
தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழர் கல்வி முதலான துறைகளில் பணியாற்றிய ஆளுமைகள் குறித்த ஆய்வுகள் காலத்துக்குக் காலம் பலராலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய ஆய்வுகள் மேற்கூறப்பட்ட துறைகளில் பணியாற்றிய ஆளுமைகளின் வரலாறு 'தனிமனிதவரலாறு' என்ற வரையறைக்குள்மட்டுப்படுத்தப்படுவதில்லை. இவற்றைத் தாண்டி இவ்வாறான ஆளுமைகள் பற்றிய ஆய்வுகள் அக்காலத்து மொழி, கல்வி, இலக்கியம், சமூகம் முதலான துறைகளின் வரலாறாகவும் அமைந்து விடுகின்றன. அந்தவகையில் வ.உ.சி தமிழ்ப்புலமை மரபின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவராக உணரப்படுகின்றார். இவர் சுதந்திரப் போராட்ட வீரர், நூலாசிரியர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர் எனப் பல துறைகளில் பணியாற்றியுள்ளார். இவரது படைப்புகளை நுணுகி நோக்கும் போது தனித்துவமான இரு அம்சங்கள் முனைப்புற்று நிற்பதனை இனங்காணலாம். ஒன்று அவரது ஆராய்ச்சி மனப்பான்மை மற்றையது அவற்றுள் காணப்படும் எளிமைத்தன்மை என்பனவாகும். இவரது தொல்காப்பிய எழுத்ததிகார உரைப்பதிப்பின் சிறப்பம்சங்களை வெளிக்கொண்டு வருவதாகவே இந்த ஆய்வு அமைந்துள்ளது. இந்த ஆய்வானது விவரண மற்றும் பகுப்பாய்வு முறைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.