Abstract:
தமிழ்ச் சமூக வரலாற்றில் சங்க காலம் பொருளாதாரமும் பண்பாடும் ஒருங்கிணைந்த காலமாக விளங்குகிறது. இக்காலத்தில் மனித வாழ்க்கை நிலவியல் சூழலை அடிப்படையாகக் கொண்டிருந்தது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலப்பகுப்புக்களின் அடிப்படையில் உருவான தொழில்சார் சமூக அமைப்புகள் முக்கியமானவை. நிலவியல் அமைப்பின் அடிப்படையில் பரதவர்கள் நெய்தல் நிலத்தைச் சார்ந்தவர்கள். கடலோரப் பகுதிகளில் வாழ்ந்த இவர்களின் வாழ்க்கை முறையும் தொழில்களும் கடலின் இயல்பை மையமாகக் கொண்டவையாக அமைந்திருந்தன. சங்க இலக்கியங்களில் நெய்தல் நிலமக்கள் பரதவர். நுளையர், உமணர் எனப் பல்வேறு பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இச்சொல்லாட்சிகள் யாவும் தொழில்சார் அடையாளங்களையே வெளிப்படுத்துகின்றன. மீன்பிடித்தல் இவர்களது அடிப்படைத் தொழிலாகக் காணப்பட்டாலும் அதுமட்டும் அவர்களின் வாழ்வாதாரமாக அமையவில்லை. கடலை மையமாகக்கொண்டு பல்வேறு துணைத்தொழில்களையும் மேற்கொண்டுள்ளனர். இத்தொழில்கள் சங்ககாலத் தமிழகத்தின் பொருளாதார அமைப்பை இயக்கிய முக்கிய சக்தியாகவும் அமைந்தன. சங்க இலக்கியங்கள் பரதவ மக்களின் முதன்மைத் தொழில்கள் பற்றியும் துணைத் தொழில்கள் பற்றியும் பதிவு செய்துள்ளன. ஆனால் நெய்தல் நில மக்களின் தொழில்கள் பற்றிச் செய்யப்பட்ட பெரும்பாலான ஆய்வுகள் மீன்பிடித்தல் என்ற ஒரே அடையாளத்திற்குள் சுருக்கப்பட்டுள்ளன. பரதவர்களின் குறுந்தொழில்கள் உரிய கவனத்தைப் பெறவில்லை. இந்த ஆய்வு சங்க இலக்கியங்களின் வழி அறியலாகும் பரதவர்களின் பெருந்தொழில்களையும் குறுந்தொழில் களையும் அடையாளங் காணுவதோடு, நெய்தல் நிலத்தின் இயற்கைச்சூழல் பரதவர்களின் தொழில்கள் உருவாகவும் வளரவும் எவ்வாறு அடிப்படையாக அமைந்தன என்பதையும் இவர்களுடைய தொழில்கள் எவ்வளவு சமூகத்தேவையுடன் இணைந்தவை என்பதையும் ஆராயும் முயற்சியாக அமைகிறது. பரதவர்கள் பிரதான தொழிலாக மீன்பிடியையும் பல்வேறு குறுந்தொழில் களையும் மேற்கொண்டுள்ளனர் என்பதும் அவர்களது தொழில்கள் சங்ககாலப் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றின என்பதும் இவ்வாய்வின் கருதுகோளாகும். சங்க இலக்கியங்களான எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் இவ்வாய்வின் முதன்மை ஆதாரங்களாக அமைகின்றன. விளக்கமுறைத் திறனாய்வின் அடிப்படையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது. சங்ககாலப் பொருளாதார வளர்ச்சியில் பரதவர்களின் பங்களிப்பை அறிந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.