Abstract:
தமிழ் இலக்கிய மரபில் சங்க இலக்கியங்கள் தனித்துவமான வரலாற்று ஆவணங்களாக விளங்குகின்றன. அக்காலத் தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கை முறை, அரசியல், பொருளாதாரம், மற்றும் பண்பாடு, வணிகம் வளர்ச்சியை வெளிப்படுத்துகின்றன. இவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைவது கடல் சார்ந்த வாழ்க்கையும் கடல்வணிகமும் ஆகும். நிலவழி வணிகத்துடன் இணைந்து கடல்வழி வணிகமும் சிறப்புற்றிருந்தது. சங்கத்தமிழன் கடலை அச்சத்தின் அடையாளமாகக் கருதாமல் வாழ்வாதாரமாகவும் வணிகப்பாதையாகவும் கண்டான். கடல் வணிகம் சங்கத் தமிழரது பொருளாதார முன்னேற்றத்திற்கும் வெளிநாட்டுத் தொடர்புகளுக்கும் அடித்தளமாக அமைந்தது. வெறுமனே பொருளாதாரச் செயல்பாடாக மட்டுமல்லாது சமூகமாற்றங்களையும் இது உருவாக்கியது. சங்கப் பனுவல்கள் தமிழர்களின் கடல்சார்அறிவு, வணிகத்திறன், வெளிநாட்டுத் தொடர்புகள், ஏற்றுமதி இறக்குமதி, பொருளாதாரச் சிந்தனை ஆகியவற்றை அறிய உதவுகின்றன. சங்க காலப் பொருளாதார வளர்ச்சியில் கடல் வணிகம் வகித்த பங்கை வெளிக்கொணர்வது இந்த ஆய்வின் நோக்கமாக அமைகின்றது. சங்ககாலத்தில் தமிழர்கள் வணிகத்தில் சிறந்து விளங்கிய முன்னேறிய சமூகமாக இருந்தனர் என்பதும் கடல் வணிகம் சங்கப் பொருளாதார வளர்ச்சிக்கும் நகர வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாக இருந்தது என்பதும் இவ்வாய்வின் கருதுகோளாக அமைகின்றது.
சங்க இலக்கியங்களான எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் இந்த ஆய்விற்கான மூலங்களாகக் கொள்ளப்படுகின்றன.இலக்கியச்சான்றுகளின் வழியாக வரலாற்றை மீள் கட்டமைக்கும் இந்த ஆய்வு தமிழர்களின் கடல் வணிக மரபின் தொன்மையையும் சிறப்பையும் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும்.