Abstract:
ஈழத்துச் சமய மரபுகளில் முருகவழிபாடு குறிப்பிடத்தக்க இடத்தினைப் பெற்றிருக்கின்றது. கிழக்கிலங்கையின் திருப்படைக் கோயில்களில் ஒன்றாக வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் கோயில் விளங்குகின்றது. இக்கோயிலின் மீது வீரக்கோன் முதலியார் காதல் பிரபந்தமொன்றினைப் பாடியுள்ளார். சித்திரவேலாயுதர் காதலைச் சமய இலக்கியமாகவே பலர் நோக்குகின்றனர். இந்நூல் இலக்கியப் பண்புகள் பல வற்றைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது. சித்திரவேலாயுதர் காதலை இலக்கிய நோக்காகக் கொண்டு அதன் புலப்பாட்டு மரபை ஆய்வு செய்வதே ஆய்வின் முக்கிய பிரச்சினையாகக் கொள்ளப்படுகின்றது. வீரக்கோன் முதலியாரின் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் காதல் பிரபந்தம் ஆய்வின் முதன்மை மூலமாகக் கொள்ளப்படு கின்றது. இந்நூல் தொடர்பாக எழுந்த வசனநூல். கட்டுரைகள். ஆய்வுகள் துணைமை ஆதரங்களாகக் கொள்ளப்படுகின்றன. இந்நூல் இலக்கியப் பண்புகளைக் கொண்டு விளங்குகின்றது என்ற கருதுகோளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது. வீரக்கோன் முதலியாரின் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் காதல் பிரபந்தத்தில் இலக்கியப் புலப்பாட்டு மரபு எவ்வாறு வெளிப்பட்டு நிற்கின்றது என்பதை விவரண மற்றும் பகுப்பாய்வு முறையியல்களைத் துணைக்கொண்டு ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.