Abstract:
சிலப்பதிகாரம் பெண்ணை முதன்மைப்படுத்தும் காப்பியங்களில் ஒன்றாகும். கண்ணகி மட்டுமல்லாமல் பல்வேறு சமூக வாழ்நிலை வேறுபாடுகளைக் கொண்ட துணைப்பாத்திரங்கள் காவியத்தின் செல்நெறிக்கு செழுமை சேர்க்கின்றனர். அந்தவகையில் நாடுகாண்காதை முதல் அடைக்கலகாதை வரையான ஆறுகாதைகளில் இடம்பெறும் சமணப்பெண் துறவியான கவுந்தியடிகள் சிலப்பதிகாரக்கதைப்போக்கில் பெறும் வகிபாகத்தையும் அவரின் முக்கியத்து வத்தையும் காவியத்தின் வழி கண்டடைவதே இந்த ஆய்வின் நோக்கமாகும். சமணகாவியம் என்று சொல்லப்படுவதற்கு ஏதுவான சமணக்கருத்துகளை எடுத்துரைப்பதுதான் கவுந்தியடிகளின் பாத்திரவார்ப்பு நோக்கமா? கண்ணகியின் ஆளுமையில் செல்வாக்குச் செலுத்துதல்தான் நோக்கமா? என்ற ஆய்வு வினாக்களுக்கான தேடலாக இந்த ஆய்வு அமைகின்றது. பாசம்கெடுக கவுந்தி என்ற வாக்கின் பின்னும் கண்ணகி மீதான பாசத்தையும் பற்றையும் துறக்காத அவரது இயல்பையும் அறச்சீற்றத்தை கண்ணகிக்கு முப்பதுநாட்கள் உடனிருந்து பழகிய இயல்பால் தொற்றவைத்த பாங்கும் என்று அவரது ஆளுமையையும் மதிப்பிடுவதாக இந்த ஆய்வு அமைகின்றது. ஆய்விற்கு விவரணமுறையியலே பெரிதும் பயன்பட்டுள்ளது.