Abstract:
தமிழ்ச்சமூகத்தில் பரத்தமை பற்றிய கருத்துகளை இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. சங்க அக இலக்கியங்களில் பரத்தை என்னும் பெண் பாத்திரம் முதன்மை பெறுவதோடு சமூகத்தில் பரத்தமையும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகக் காணப்பட்டது. அறநெறிக் காலத்தைப் பொறுத்தவரை பரத்தமை கடிந்துரைக்கப்பட்ட தன்மையை அற இலக்கியங்களின் வழி அறியமுடிகின்றது. அறநெறிக் காலத்தில் தோன்றிய இரட்டைக்காப்பியங்கள் பரத்தையரைக் கணிகையர் எனப் பெயர் சுட்டியதோடு ஒரு சமுதாய நிறுவனமாகச் செயற்பட்ட பாங்கினையும் கணிகையர் குலமரபின் மாற்றத்திற்கான புதிய முயற்சிகளையும் எடுத்துக்காட்டியுள்ளன. அறநெறிக்காலச் சமூகக் கட்டுமானத்தில் பொதுமகளிர்க்கு எவ்வாறான இடம் வழங்கப்பட்டுள்ளது? அந்த இடத்தை அற இலக்கியங்கள் உரியவகையில் புலப்படுத்தி நிற்கின்றனவா? என்பது ஆய்வின் பிரச்சினையாகக் கொள்ளப்பட்டு "அறநெறிக்காலப் பண்பாட்டசைவி யக்கத்தில் பொதுமகளிர்" என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது. பண்டைத்தமிழ்ச் சமூகத்தில் பரத்தமை ஓர் ஒழுக்கமாகப் பயிலப்பட்ட நிலையில் அறநெறிக்காலச் சமூகத்தில் அவ் எண்ணக்கருவின் பயில்வு எவ்வாறிருந்தது என்பதே இந்த ஆய்வின் நோக்கமாகும். பரத்தமை குறித்த எண்ணக்கருவின் பயில்வினை அறிவதற்கு அறநெறிக்கால இலக்கியங்கள் எல்லைப்படுத்தப்படுகின்றன. அறநெறிக் காலத்தில் பரத்தமை சமூக நிறுவனமாகச் செயற்பட்டதோடு தளர்ச்சி நிலையும் கண்டது என்ற கருதுகோளின் அடிப்படையில் ஆய்வு முன்னெடுக்கப்படுகின்றது. அற இலக்கியங்களும் இரட்டைக் காப்பியங்களும் முதன்மை ஆதாரங்களாகவும் பரத்தமை தொடர்பாக எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும் நூல்களும் துணை ஆதாரங்களாகவும் ஆய்வில் கொள்ளப்படுகின்றன. அற இலக்கியங்களில் பரத்தமை பற்றிய பயில்வினை அறிவதற்கு விவரண ஆய்வு முறையியலும் பரத்தமை தொடர்பான கருத்து மாற்றங்களை அறிவதற்கு ஒப்பீட்டு ஆய்வு முறையியலும் பின்பற்றப்படுகின்றது. அறநெறிக் காலப் பண்பாட்டு அசைவியக்கத்தில் பரத்தமை ஏற்படுத்திய தாக்கத்தை அதன் பயில்வு நிலையை இந்த ஆய்வின் மூலம் கண்டுகொள்ளமுடியும்.