Abstract:
சங்கமருவியகாலத்தில் தோற்றம் பெற்ற அறநீதி இலக்கியங்கள் மக்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கான ஒழுக்க நெறிகளை விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்தன. தனிமனிதன் குடும்பம். சமூகம் என்னும் நிலைகளில் ஒருவர் பின்பற்ற வேண்டியதும் விலக்க வேண்டியதுமான அற ஒழுக்கங்கள் அவற்றில் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. தனிமனித நிலையில் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்களுள் நாணுடைமையும் ஒன்றாகும். நாணம் என்பது விரிந்த பொருளில் அறநீதி இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது. ஆண்-பெண் இருபாலாருக்கும் பொதுவான நாணம். பெண்களுக்கே சிறப்பான நாணம் என வகைப்படுத்திப் பார்க்கும் அளவிற்கு நாணம் பற்றிய செய்திகள் அறநூல்களில் தரப்பட்டுள்ளன. நற்குணங்களால் உயர்ந்தோர் தமக்கு ஒவ்வாத கருமங்களால் வெட்கப்படுவதே ஆண்-பெண் இருபாலாருக்கும் பொதுவான அறமாகக் கூறப்படுகிறது. பெண்களுக்கு இயல்பான குணமாக அமையும் நாணம் அவர்களுக்கு அழகினைத் தருவதுடன் அவர்கள் தற்காத்துக் கொள்ளுதற்கான அரணாகவும் அமைகின்றது. ஆதலால் நாணத்தைப் பின்பற்றி ஒழுக வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் பின்பற்றாவழி ஏற்படும் தீங்கு குறித்தும் அறநீதி இலக்கியங்கள் விரிவாக விவாதிக்கின்றன. அறநீதி இலக்கியங்களில் நாணம் பற்றிக் கூறப்பட்டுள்ள செய்திகளை அறிதல், அவற்றின் வழி நாணம் பற்றி அறஇலக்கிய ஆசிரியர்கள் சொல்ல வந்த விடயங்களை விளங்கிக் கொள்ளுதல். நாணம் குறித்து அறஇலக்கியங்களில் எடுத்துக்காட்டப்பட்ட விடயங்களின் சமூகப் பொருத்தப்பாட்டினை அறிந்து கொள்ளுதல் என்பன இந்த ஆய்வின் நோக்கங்களாக அமைந்துள்ளன. இந்த ஆய்வு விவரண ஆய்வு முறையியலின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது. ஆய்வின் மூலாதாரங்களாக சங்கமருவியகாலத்தில் தோற்றம் பெற்ற பதினொரு அறநூல்களும் அவற்றுக்கென எழுதப்பட்ட உரைகள், உரைக்குறிப்புகள். விளக்கங்கள் என்பன கொள்ளப்படுகின்றன. இந்த ஆய்வின் மூலம் தனிமனித ஒழுக்கங்களுள் ஒன்றான நாணத்தின் சிறப்பு. மனிதவாழ்வில் அதன் முக்கியத்துவம். அதனைப் பின்பற்றாவழி ஏற்படும் கேடு முதலானவற்றை அறிந்து கொள்ள முடியும்.