Abstract:
சுற்றுலாத்துறையின் நிலைத்து நிற்கும் தன்மையையும் வளர்ச்சியையும் தீர்மானிப்பதில் உணவு வழங்கல் முக்கிய பங்கினை வகிக்கின்றது. அவ்வகையில் 1765 ஆம் ஆண்டு முதன்முதலாக பரிஸ் நகரத்தில் உணவகமானது ஆரம்பிக்கப்பட்டது. நாளுக்கு நாள் மக்களின் தேவைகள் அதிகரித்த காரணத்தினால் உலகின் பல்வேறு பாகங்களிலும் உணவகங்களின் பரவலான வளர்ச்சியானது இடம்பெறத்தொடங்கியது. அவ்வகையில் உணவு மற்றும் பானங்கள் வழங்கும் சேவையில் உணவகங்கள் பாரிய பங்காற்றுகின்றன. இலாப நோக்கத்தைக் கொண்டு இயங்குகின்ற உணவு வழங்கும் ஸ்தாபனங்களில் இவ்வுணவகங்கள் முதன்மை பெறுகின்றன. இவ்வுணவு வழங்கும் ஸ்தாபனங்களில் உணவு சமைத்தல் மட்டுமன்றி அவற்றை வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமான முறையில்
வழங்குவதில் பரிமாறல் செயற்பாடு இன்றியமையாததும் முதன்மையானதுமான ஓர் செயற்பாடாகக் காணப்படுகின்றது. இவ்வகையில் யாழ்மாநகர சபைக்குட்பட்ட உணவகங்களின் பரிமாறல் செயற்பாடுகளின் தரம் குறித்த இவ்வாய்வில் தொண்ணூற்று எட்டு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான உணவகங்களிலிருந்து முப்பது உணவகங்கள் எழுமாற்றாகத் தெரிவு செய்யப்பட்டு ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்விற்கான தரவுகள் களநிலையிலிந்து பெறப்பட்ட நேரடி அவதானிப்புக்கள், நேர்காணல், வினாக்கொத்து என்பவற்றுடன் துணைநிலைத்தரவுகளான நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் என்பவற்றிலிருந்து பெறப்பட்டு பகுப்பாய்விற்குட்படுத்தப்பட்டு ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.