Abstract:
ஈழம் (இலங்கை) சித்த மருத்துவத்தின் ஒரு பழமையான மற்றும் தனித்த கிளையின் மையமாக விளங்குகிறது. இந்த 'தமிழ் மருத்துவம்' எனப்படும் முறை, தமிழரின் கலாச்சாரம், சமயம் மற்றும் இயற்கைச் செல்வங்களோடு பின்னிப்பிணைந்து, இந்திய ஆயுர்வேதத்திலிருந்து வேறுபட்ட தனித்தன்மை வாய்ந்த அடையாளத்தைக் கொண்டுள்ளது. இப்பாரம்பரியத்தின் வேர்ப்பகுதி இலங்கையை ஆண்ட இராவணனுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. அவரது 'இராவண சிந்தாமணி மருத்துவம்' சித்த மருத்துவத்திற்கு முன்னோடியாகக் கருதப்படுகிறது. அர்க்க பிரகாசம், மலைவாகடம் மற்றும் ராவண சம்ஹிதா போன்ற நூல்கள் அறுவைச் சிகிச்சை, ரச வைத்தியம் மற்றும் மூலிகை அறிவியல் ஆகிய துறைகளில் முன்னைய நுண்ணறிவை வெளிப்படுத்துகின்றன. இந்த அடித்தளத்தின் மீது பரராசசேகரன், செகராசசேகரன் போன்ற அரசர்களின் ஆதரவில் தொகுக்கப்பட்ட பரராசசேகரம், செகராசசேகரம், மற்றும் பிற்காலத்தில் இருபாலைச் செட்டியாரின் வைத்திய விளக்கம் போன்ற நூல்கள் இப்பாரம்பரியத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்குச் சான்றாக உள்ளன. இந்நூல்கள் இந்திய மருந்துகளைக் குறிப்பிடாமல், ஈழத்தின் தனித்த இயற்கைச் சூழலுக்கே உரித்தான மருத்துவ அறிவைப் பதிவு செய்துள்ளமையில் சிறப்பு வாய்ந்தவை. இராவணனின் படைப்புகளின் பெரும்பகுதி காலப்போக்கில் இழக்கப்பட்டாலும், இருபாலைச் செட்டியார் போன்றோரின் நூல்கள் மூலம் இப்பழமையான அறிவின் சிகரங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஈழத்து சித்த மருத்துவம்,பண்டைய தொடக்கம் முதல் நவீன காலம் வரை ஒரு செழுமையான, தனித்துவமான மற்றும் தொடர்ச்சியான மருத்துவப் பாரம்பரியம் என்பது உறுதிப்படுகிறது.