dc.description.abstract |
சமூகம் என்பது எப்போதும் தேக்க நிலையில் இருப்பதில்லை. அதன் வளர்ச்சிக்கும் மாறுதல்களிற்கும் பல்வேறு காரணங்கள் துணை செய்கின்றன. 19ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா உட்பட புரட்ஸ்தாந்து கிறிஸ்தவ தேசங்களில் ஏற்படுத்தப்பட்ட சமய எழுச்சியானது. பல நாடுகளில் கிறிஸ்தவ மனிநேயப்பண்பாட்டை வளர்ப்பதில் ஆர்வத்துடன் செயற்பட்டது. இவ்வாறு தோற்றம்பெற்ற அமைப்புகளில் அமெரிக்கா மிஷனரியின் தோற்றமும் அதன் வளர்ச்சிநிலையும் யாழ்ப்பாண சமுதாயத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி அதன் வழி புதியதோர் சிந்தனையுடைய பிரதேசமாக யாழ்ப்பாண சமுதாயத்தை வளர்ச்சியடையச் செய்வதில் செல்வாக்குச் செலுத்தியிருந்தது. அமெரிக்கமிஷன் என்பது இலங்கையில் இயங்கி வந்த கிறிஸ்தவ மறைப்பரப்புனர் அமைப்பாகும். American Board of Commissioners for foreignmissions (ABCFM) இன் நிதி உதவியினால் 1813ஆம் ஆண்டு கிறிஸ்தவ மதபோதனையின் அடிப்படையில் சமூக மாற்றத்தினை ஏற்படுத்தும் நோக்குடன் இலங்கைக்கு வருகை தந்தனர். 1813ஆம் ஆண்டு இலங்கையில் தமது பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் களவாய்வுகளை மேற்கொண்ட இவர்கள் தமக்கு ஏற்றபிரதேசங்களை தெரிவுசெய்து கொண்டனர். குறிப்பாக பிறவுண்றிக். நியூவெல் போன்ற மிஷனரியினர் இத்தகைய பணிகளில் ஈடுபட்டனர் இவர்கள் யாழ்ப்பாணத்தில் தங்கள் அதீத கவனத்தை செலுத்தியதுடன் 1820ஆம் ஆண்டு தொடக்கம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை (ஏறத்தாள 40 ஆண்டுகள்) யாழ்ப்பாணத்தில் தமது அளப்பரிய சேவையை ஆற்றினர். யாழ்ப்பாணத்தில் நிலவிய சுதேச மக்களின் கல்வியார்வம், இலங்கைத்தமிழர் மத்தியில் மதபிரசாரம் செய்தால் பின்னர் தென்னிந்தியாவிலுள்ள இலட்சக்கணக்கான தமிழர் மத்தியில் பணிபுரிய இலகுவாக இருக்கும் என்ற தூரநோக்கும். ஏனைய பிரதேசங்களை விட யாழ்ப்பாணப் பிரதேசத்தில் மிஷனரிமாரினை நிலைகொள்ளச் செய்தது. யாழ்ப்பாணப் பிரதேசத்தில் யேசு கிறிஸ்துவின் உண்மை தத்துவங்களை போதித்ததுடன் விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம், விவேகம், நீதி, மனத்திடம், உள்ளிட்ட பல்வேறு மனிதநேயப் பண்பாட்டை கிறிஸ்தவத்துவத்தின் அடிப்படைக் கருத்துக்களை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தி அதன் அடிப்படையில் தமிழ் சமுதாயத்தை புதியதோர் சிந்தனை நோக்கி அழைத்து வந்தனர். இதனால் அக்கால சமுதாயத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன.
யாழ்ப்பாணத்திற்கு மிக ஆர்வமாக பணிபுரியவருகை தந்த மிஷனரியினர் சமயக் கோட்பாடுகளுக்கும் கல்விக்கு பெருமதிப்பளிப்பவர்களாகக் காணப்பட்டனர். இங்கிலாந்தில் கொங்கறிகேஷனல் திருச்சபையார் அங்கிலிக்கன் திருசபையிலிருந்து பிரிந்த காலத்தில் இருந்தே கல்விவளர்ச்சிக்கு குறிப்பாக உயர்கல்விவளர்ச்சிக்கு அதிகமுக்கியத்துவம் அளித்துவந்தனர். இக்கல்விவளர்ச்சியில் இவர்கள் செலுத்திய அதிக்கவனமே யாழ்ப்பாண தமிழர் சிந்தனை வளர்ச்சியில் மாற்றம் ஏற்படுத்த காரணமானது எனலாம். குறிப்பாக பெண்களின் கல்வி வளர்ச்சியிலும்,பெண்கள் தொடர்பாக சமுதாயத்தில் காணப்பட்ட நிலைமையில் பெரிதளவிலான மாறுதல்கள் ஏற்படக் காரணமாயிருந்தனர். இவற்றுள் பெண்கள் தொடர்பான நிலைமைகளில் பெருமளவிலான மாற்றங்கள் இவர்களினால் ஏற்படுத்தப்பட்டது. உதாரணமாக சமூதாயத்தில் பின்னடைவில் காணப்பட்டிருந்த பெண்களை சமத்துவத்துவத்தின் அடிப்படையில் சமுதாயத்தில் முக்கியஸ்தர்களாக்கியதுடன் அவர்களின் சமுதாய வளர்ச்சிக்கு கல்வி அறிவினை வழங்குவதற்கு முன்வந்தனர். 1816ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டு பெண்கள் மாத்திரமே கல்வி அறிவு பெற்றிருந்தனர். இந்நிலைமையை மாற்றியமைக்க விரும்பிய மிஷனரிகள் விடுதிப்பாடசாலைகளை அமைத்ததுடன் இவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் பாடசாலைகளில் பெண்களை இணைத்து அவர்களை சமுதாயத்தில் வலுவுடையவர்களாக மாற்ற எண்ணினர். இவர்களின் முயற்சியினால் 1819ஆம் ஆண்டு 10பெண்களும், 1824ஆம் ஆண்டு 613 பெண்களும், 1836ஆம் ஆண்டு 1000க்கு மேற்பட்ட பெண்களும், 1868ஆம் ஆண்டு 728 பெண்களும், 1900ஆம் ஆண்டு 2791 பெண்களும், 1911ஆம் ஆண்டு 3544 தமிழ் பெண்களும் கல்வி கற்க ஆரம்பித்தனர். இவ்வாறு வளர்ச்சியடைந்த பெண்கல்வியினால் பெண்கள் வலுவுள்ளவர்களாக மாற்றப்பட்டனர். இவ்வாறு வளர்ச்சியடைந்த
பெண்கல்வியில் அமெரிக்க மிஷனரியின் பங்களிப்பை அறிந்துகொள்ளும் நோக்குடன் இவ் ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது. கல்வி வளர்ச்சியானது பெண்களை வலுவூட்டும் ஒரு செயற்றிட்டமாக இருந்ததுடன் இது சமய வரம்புகளை தாண்டி சென்று மனிதநேயத்தையும், சமூகவளர்ச்சியையும் ஒரு புதிய மானிட பண்பாட்டையும் உருவாக்கியுள்ளது என்பதே இவ் ஆய்வின் பெறுபேறாகும். |
en_US |