dc.description.abstract |
சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் மரபினை மீளக் கண்டுபிடித்தல் என்பது அரசியல் பண்பாட்டுச் சூழலின் மிக முக்கியமான வேண்டுகோளாக இருந்தது. குறிப்பாக 1950களது நடுப்பகுதியில் எஸ். டபிள்யு. ஆர்.டி பண்டாரநாயக்காவின் தேசத்தைக் கட்டியெழுப்பும் திட்டங்கள் இதனை அதிகபட்சம் அதிகாரநிலைப்படுத்தியதுடன் சிங்கள பௌத்தப் பண்பாடு பற்றிய கற்பனை செய்யப்பட்ட கடந்தகாலம் நிகழ்காலத்து அரசியற் பண்பாட்டு வரலாற்றுத் தேவைக்கேற்றவாறு தகவகைப்பட்டது. இது சிங்கள பௌத்த அரசியல் உயர்குழாத்தினது மேல் மத்தியதரவர்க்க நலன்கள் மற்றும் அபிலாசை சம்பந்தப்பட்ட மேலிருந்து கீழே தரப்பட்ட ஒரு பயில்வாகவும், அதற்கேயான உள்ளேற்புக்களையும், வெளிவிடல்களையும் உள்ளடக்கிய அரசியல் நடத்தைக் கோலமாகவும் காணப்பட்டன. இத்தகைய பின்னணியில் பேராதனியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த சரச்சந்திரா சிங்கள அரங்கில் மரபினை மீள்கண்டு பிடித்தல் என்ற செயற்பாட்டுப் பின்னணியில் இருந்து மனமே, சிங்கபாகு எனும் இரண்டு நாடங்களைத் தயாரித்தார். அதனால் அருட்டப்பெற்ற அதே பல்கலைக்கழகத்தில் அவருக்கு ஒருசாலைப் பேராசிரியராக தமிழ்துறையிலிருந்த சுப்பிரமணியம் வித்தியானந்தன் கர்ணன்போர், வாலிவதை இராவணேசன் முதலான கூத்துக்களை படச்சட்ட மேடைக்கு உரியதாக்கி நகரப் பார்வையாளர்களை நோக்கி எடுத்து வந்தார். இம் முயற்சி ஒரு தேசிய அரங்கை உருவாக்கும் முயற்சியாக அவரது மாணவர் குழாத்தினால் பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்த தமிழ் நாடக அரங்கில் ஏறத்தாழ கால்நூற்றாண்டுக்கு மேலாக தேசிய நாடகம் பற்றிய பலவேறுபட்ட உரையாடல்கள் கூத்தை மையமாக் கொண்டு நிகழ்ந்தன. அதன் கனத்த நிழல்கள் இன்றுவரை ஈழத்து அரங்கு பற்றிய உரையாடல்களிற் தொடர்கிறது. இந்த முயற்சிகளின் மூலங்களை எவ்வாறு அடையாளங்காண்பது? தேசியவாதம் என்பது ஒற்றைப்படையான விடயமா? அதனை முன்னெடுக்கும் தரப்புகளது வர்க்க அபிலாசைகள் அவற்றுள் காணப்பட்டனவா? விளிம்புநிலை கற்கைகளது பின்னணியிலிலுருந்து கேட்பதானால் அதனைக் காலம் காலமாகப் பயின்ற தரப்புகள் 'குரல் தரத்தக்க நிலையில் இருந்தனவா? அல்லது அது அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு தகவமைக்கப்பட்டதா? இந்த தகவமைப்பின் அரசியற் பின்னணியில் ஒட்டுமொத்த தேசிய அரங்கக் கருத்தாடல்களது அடிப்பர்டாக இருந்தவை எவை? அவை யாரை பிரநிதித்துவம் செய்தன? தேசியவாதத்தின் பெயரால் யாரை பிறத்தியார் ஆக்கின? எனும் ஆய்வுக்கேள்விகளை அடிப்படையாகக் கொண்ட இவ்வாசிப்பு எழுதப்பட்ட வரலாறுகள், கட்டுரைகள், நேர்காணல்கள். அவதானிப்புக்களை வாசிப்புக்கான மூலத்தரவுகளாகக் கொண்டு நகர்வதோடு விபரிப்பு, எடுத்துரைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பகுப்பாய்வாக அமைகிறது. |
en_US |