Abstract:
வீடுகள் தாம் வாழும் சமூகத்தின் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் பண்பாட்டு நிலபரங்களின் குறிகாட்டியாகவுள்ள அதேவேளை, வீட்டு உரித்தாளரது சமூக இருக்கை நிலையின் காண்பிய நிலைப்பட்ட பிரதிநிதித்துவமாயும் உள்ளன. அவ்வகையில் அவை கட்டுமான ரீதியானவொரு வரலாற்றுச் சாட்சியமாகவும், கட்டுமான நிலைப்பட்ட சூழலாகவும் (built environment) உள்ளன. அந்த வகையில் சமூக அசைவியக்கங்கள் யாவற்றினதும் பதிவுப் பிரதிகளாகவும் அவை காணப்படுகின்றன. அந்த வகையில் வீடுகளை வாசிப்பது என்பது குறிப்பிட்ட சமூகத்தையும், அதன் உறுப்பினர்களையும் அவர்களது சமூக பொருளாதார அரசியல் பண்பாட்டு பகைப்புலத்தில் நிறுத்தி வாசிப்பதாகக் காணப்படுகிறது.
அந்த வகையில் சமூக மேல்நிலையாக்கத்தினை வாசிப்பதற்கான பண்பாட்டுச் சுட்டிகளுள் ஒன்றாகவும் வீடுகள் காணப்படுகின்றன. என்பதனால் வீட்டிற்கான கட்டுமான ஊடகங்கள், பாணி (style) ரீதியான மாற்றங்கள் மற்றும் அளவுத்திட்டங்களில் ஏற்படுகின்ற மாற்றங்கள், வெளியைப் பிரையோகிக்கும் முறைகள் அதன் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் விலக்குகள் (taboos) என்பன இவ்வகையில் மேற்படி சமூக மாற்றங்களை கோடி காட்டி நிற்கும் கட்டுமான அலகுகளாகும்.
அந்த வகையில் 1870 க்கும் 1940 க்கும் இடைப்பட்ட கால கட்ட யாழ்ப்பாணத்து வீட்டு முகப்புக்கள் என்பது மேற்படி சமூக பொருளாதாரப் பண்பாட்டு அசைவியக்கத்தினின் ஒரு காட்சித் தடையமாக காணப்படுகிறது என்பதுதான் இக்கட்டுரை எடுத்துக்காட்ட விரும்புகின்ற விடயமாகும்.
யாழ்ப்பாணத்தில் வீடென்பது வெறும் கட்டுமானமல்ல எனவும், பதிலாக வீடு அதனைச் சுற்றியுள்ள 'வளவு எனும் வேலியால் எல்லையிடப்பட்ட வெளியுடனும், கிணறு. மந்தைகளுக்கான 'கொட்டில்' எனப்படும் கொட்டகை முதலியவற்றுடனும் கூடிய ஒரு தொகுதிப் பரப்பாகும் எனவும் சிவத்தம்பி அவர்கள் வாதிடுவார் (சிவத்தம்பி 2002). மேற்படி வீட்டுப் பரப்புக்குள் நுழைவதற்கான கூரையுடைய வாயிலமைப்பு
சங்கடப்படலை' என அழைக்கப்பட்டது.