dc.description.abstract |
உலகளாவிய ரீதியில் நாட்டாரியல் ஆய்வுகள் முக்கியத்துவம் பெற்று வருகின்ற நிலையில் ஈழத்திலும் தமிழர் வாழ் பிரதேசங்களில் இவ்வகை ஆய்வுகள் பெரும் முக்கியத்துவமுடையனவாக உள்ளன. இங்கு நாட்டார் கதைகளைச் சேகரிக்கும் முயற்சி மிக அண்மைக் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டார் கதை பற்றி நடைபெற்ற ஆய்வுகளும் ரசனை முறையிலானவையாகவே உள்ளன. இந்நிலையில் ‘கிழக்கிலங்கைத் தமிழ் நாட்டார் கதைகள் புலப்படுத்தும் சமூக பண்பாட்டு மரபுகள்’ என்ற தலைப்பிலான இவ்வாய்வு வடக்கே வெருகல் முதல் தெற்கே குமண வரை பரந்திருந்த பழைய மட்டக்களப்பு தேசத்தை ஆய்வுப் பிரதேசமாகக் கொள்கிறது. இங்குள்ள தமிழ் மக்களிடம் வழங்குகின்ற நாட்டார் கதைகளைச் சேகரித்து ஆய்வு செய்வதன் மூலம் இப்பிரதேச மக்களின் பண்பாட்டம்சங்ளை மீள் கண்டுபிடிப்புச் செய்யலாம் என்பது நம்பிக்கை. நாட்டார் கதைகள் தொடர்பான அறிவியல் ஆய்வுக்கு அடிப்படை மூலமாக அமையத் தக்க விதத்தில் ஆவணப்படுத்தலை மேற்கொள்ளுதல், மட்டக்களப்புப் பிரதேச மக்களின் பண்பாட்டை மீள் கண்டு பிடிப்புச் செய்தல், இன்றைய சூழலில் நாட்டார் கதைகளின் பயன்பாட்டை விளங்கிக் கொள்ளுதல், ஈழத்தின் ஏனைய பிரதேச நாட்டார் கதைகளோடும் இந்திய, உலகத்து நாட்டார் கதைகளோடும் அவற்றை ஒப்பிட்டாராய வழியேற்படுத்துதல் என்பன இவ்வாய்வின் நோக்கங்களாகும். மட்டக்களப்பிலுள்ள கிராமங்கள் அனைத்திலும் குறிப்பிட்ட காலப்பகுதியில் தனியொருவர் கள ஆய்வு நடத்துதல் ஆய்வு நெறிப்பட்டதன்று. ஆகையால் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் மட்டும் கள ஆய்வு மேற்கொண்டு நாட்டார் கதைகள் சேகரிக்கப்பட்டன. அவற்றோடு சில நாட்டார் கதைத் தொகுப்புகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்த நாட்டார் கதைகளும் இவ்வாய்வின் அடிப்படை மூலங்களாகக் கொள்ளப்படுகின்றன. எந்தவொரு நாட்டாரியல் ஆய்வையும் தனியொரு கோட்பாட்டெல்லைக்குள் வரையறுத்துக்கொள்ள முடியாது. இதனால் இவ்வாய்வு நாட்டார் பண்பாட்டுக் கோட்பாட்டைப் பிரதானமாகக் கொண்டு வரலாற்று நிலவியல், அமைப்பியல், உளவியல், செயல்திறக் கோட்பாடுகளையும் இணைத்து மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வு அறிமுகம், இலக்கிய மீளாய்வு, நாட்டார் கதைகள் அறிமுகமும் வரையறையும், மட்டக்களப்பு நாட்டார் கதைகளின் வகைப்பாடு, மட்டக்களப்பு நாட்டார் கதைகளும் சமூக பண்பாட்டு மரபுகளும், மதிப்பீடு என்ற தலைப்புகளில் ஆறு அத்தியாயங்களைக் கொண்டதாக இவ்வாய்வு அமைகிறது. இனப் போராட்டச் சூழல் காரணமாக வாழ்வியல் அடையாளங்கள் பலவற்றை இழந்து நிற்கும் தமிழ்ச் சமூகம் தனது பண்பாட்டம்சங்களை மீள் கண்டு பிடிப்புச் செய்வதற்கு இவ்வாய்வு உதவும். அதேவேளை நாட்டார் கதைகள் இப்பிரதேச மக்களின் வாழ்வியலில் பெறுகின்ற முக்கியத்துவத்தையும் விளங்கிக்கொள்ள முடியும். |
en_US |