Abstract:
ஈழத்துத் தமிழ்ப் புலமைப் பாரம்பரியத்தில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தவராக விளங்கும் பண்டிதர் சச்சிதானந்தனுடைய ஆக்கத்திறன் பற்றியதாக விளங்கும், “பண்டிதர் சச்சிதானந்தனின் ஆக்கத்திறன் : அவருடைய எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டது” என்ற இந்த ஆய்வானது இவருடைய ஆக்கத்திறன் வெளிப்பாடுகளை ஆராய்வதாக அமைகின்றது. பல்துறைசார்ந்த அறிஞராகச் சச்சிதானந்தன் விளங்கியபோதும் அவருடைய ஆளுமை, ஆக்கத்திறன் வெளிப்பாடுகளைப் பெரிதும் வெளிப்படுத்தி நிற்பவையாக அவரது ஆக்க இலக்கியங்களே விளங்குகின்றன. அவ்வகையில், இந்த ஆய்வானது ஆக்க இலக்கியங்கள் பற்றியே பெரிதும் பேசுகின்றது. இயல் ஒன்று, தலைப்பு, அறிமுகம், பிரச்சினை, மீளாய்வு, நோக்கும் இலக்குகளும், பின்னணி, கருதுகோள்கள், ஆய்வுமூலங்கள், ஆய்வுமுறை அமைப்பு என்றவகைப்பாடுகளின் கீழ் ஆய்வினை அறிமுகம் செய்கின்றது. இயல் இரண்டு, இவருடைய ஆளுமை உருவாக்கத்திற்குப் பின்புலமாக அமைந்த காரணிகளை விரிவாக ஆராய்கின்றது. இயல் மூன்று, சச்சிதானந்தனுடைய பல்துறைசார்ந்த படைப்புக்களினையும் ஆக்க இலக்கியங்கள், பிறபடைப்புக்கள், அறிவியல் இலக்கியங்கள், கட்டுரைகள், அச்சேறாதவை என்ற பிரிவுகளின் கீழ் ஆராய்ந்து நிற்கின்றது. இயல் நான்கு, பண்டிதர் சச்சிதானந்தனுடைய ஆக்க இலக்கியங்கள் பற்றி ஆராய்வதாக விளங்குகிறது. கவிதைகள், காவியங்கள், புனைகதைகள் என்ற மூன்று பிரிவுகளின் கீழ், பல உபபிரிவுகளைக் கொண்டமைந்து, அவரது ஆக்கத்திறன் வெளிப்பாடுகள் புலப்படுத்தப்படும் இடங்களை விரிவாக நோக்கி, உருவ, உள்ளடக்க, மொழியியல் அடிப்படைகளில் ஆராய்ந்து முடிவுகளை முன்வைக்கின்றது. இயல் ஐந்தானது இவருடைய ஆளுமை உருவாக்கத்திற்கு பின்புலமாக அமைந்த பிறபடைப்புக்களான இலக்கணம், இசையாய்வு, அரசியல் சார்படைப்பு முதலானவை பற்றிச் சுருக்கமாக ஆராய்வதாக அமைகின்றது. இயல் ஆறு, ஆய்வின் தன்மைகளையும் அதன் முடிவுகளையும் இயல்ரீதியாக எடுத்துக்கூறுவதுடன், இனிவரும் ஆய்வாளர்களுக்கான சில ஆய்வுக்களங்களையும் சுட்டி நிற்கின்றது.