Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9513
Title: மனித மாண்பின் சமகால சாட்சியம்: ஸ்ரான் சுவாமியும் இந்தியப் பழங்குடியினரும்
Authors: Mery Roshinth, A.F.
Paul Rohan, J.C.
Keywords: மனித உரிமை;பழங்குடியினர்;திருஅவை;அடக்குமுறைகள்;விடுதலைவீரர்
Issue Date: 2022
Publisher: University of Jaffna
Abstract: கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார். கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். (தொ.நூ.1:27) மாண்பு என்பது மனித குலத்திற்கே உரிய பெருமையாகும். இம்மாண்பானது எல்லா மனிதருக்கும் உரித்தானது. ஆனால் இன்றைய நவீன காலப் பின்னணியிலேயே மனித மாண்பானது சின்னாபின்னமாக்கப்பட்டு, உரிமையிழந்து, அவலட்சணத்திற்குரியதாகக் காணப்படுகிறது. இவ்வாறான காலகட்டத்தில் இன்று மனித மாண்பிற்கு சாட்சியம் பகர்ந்தவராக இயேசு சபைக் குருவான ஸ்டனிஸ்லாஸ் லூர்துசாமி எனப்படும் ஸ்ரான் சுவாமி விளங்குகிறார். விதைகள் விதைக்கப்படும் போது தான் தன் பரிணாமத்தின் முழுப்பயனை அடைகிறது. அதேபோல் ஒரு சமூகப்போராளி தன்னையே தியாகம் செய்யும் போது தான் வரலாறாகிறான். ஒரு துறவி தான் கொண்ட கொள்கைக்காகவும், விசுவாசத்திற்காகவும் இரத்தம் சிந்தும் போது தான் மறைசாட்சியாகிறான். இவற்றிற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவரே ஸ்ரான் அடிகளார். இந்தியத் தமிழ்; மண் ஈன்ற ஸ்ரான் அடிகளார் இந்தியப் பூர்வீகக் குடிமக்களான பழங்குடியினரின் விடுதலைக்காகவும், அவர்களின் உரிமைக்காகவும், மாண்பிற்காகவும் தன் இறுதி மூச்சு வரை வாழ்ந்தார். இவர் மலைவாழ் மக்களின் விடிவெள்ளியாக, பழங்குடிகளின் முதுபெருந்தந்தையாக, ஆதிவாசிகளின் பிதாப்பிதாவாக, இயேசு சபையின் மூத்த துறவியாக விளங்கினார். அத்தோடு இந்திய மண்ணின் பழங்குடியினர், தலித்துக்கள், ஓரங்கட்டப்பட்டோர் எனப்பலரது எழுச்சி வாழ்விற்காக தன்னைத் தியாகம் செய்து எங்கெல்லாம் இவர்கள் புறக்கணிக்கப்பட்டார்களோ அங்கெல்லாம் நீதியை நிலைநாட்டினார். தேச மனிதத்திற்காக போராடிய இவர் பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு இறந்தார் என்பது பெரும் வேதனைக்குரியதே. இயேசுவும் இத்தகைய பணிகள் ஆற்றியும் சமுதாயத்தில் யூதர்களால் துன்புறுத்தப்பட்டு இறந்தது போல இன்று ஸ்ரான் சுவாமியும் பல துன்பங்களை அனுபவித்து இறந்தார். இதுவே ஸ்ரான் சுவாமியின் சிறப்பாக அமைகிறது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களின் மாண்பானது மனிதத்தன்மையின்றி இறக்கின்றது. எனவே கிறிஸ்தவர்களாகிய ஒவ்வொருவரும் இறைபணி என்பதோடு மட்டும் நின்று விடாது ஸ்ரான் சுவாமி போன்று பொதுநலப்பணிகளில் ஈடுபடல், தன்னார்வமிக்க பணியாளர்களை உருவாக்கல், திரு அவையுடன் இணைந்து செயற்படுதல், கிறிஸ்தவர்கள் மட்டும் தான் மனிதர்கள் அவர்களுக்கு மட்டுமே மாண்பு உண்டு என்ற சுயநலப்போக்கை தவிர்த்தல், சாதி, இன, சமயப் பாகுபாடுகளை களைந்து அனைவரும் சமமானவர்களே என்ற ரீதியில் சிந்தித்து செயற்பட முன்வரல் போன்றவையே இவ் ஆய்வின் நோக்கமாக அமைகிறது. இயல் ஒன்றில் ஸ்ரான் சுவாமியின் வாழ்வும் பணிமுன்னுரிமையும் பற்றி அறிந்து கொள்ள சஞ்சிகைகள், நூல்கள் பயன்படுத்தப்படுவதால் வரலாற்று ஆய்வு முறை பயன்படுகிறது. இயல் இரண்டில் இந்தியப் பழங்குடி மக்களின் மனித மாண்பு மீறல்களும் ஸ்ரான் சுவாமியின் தலையீடும் பற்றி விளக்குவதனால் உய்த்துணர்வு முறை பயன்படுகிறது. இயல் மூன்றில் சமகாலத்தில் மனித மாண்பின் வெளிப்பாடு, மனித மாண்பு மதிக்கப்படாமைக்கான காரணங்கள், இதில் கிறிஸ்தவத்தின் பங்கு, மனிதத்தை வளர்க்க எமக்குள்ள பொறுப்புக்கள், கடமைகள் என்பவற்றை ஒன்று சேர்த்துப் பார்க்க தொகுத்தறிவு முறை பயன்படுகின்றது. எனவே மனிதத்தை மனிதமாக மதிப்பது சிறப்பிற்குரியதாகும். பலவிதத்தால் வேறுபாடுகள் இருந்தாலும் மனிதன் என்ற எண்ணக்கருவில் அனைவரும் சமமே. எனவே வேறுபாடுகளைக் களைந்து மனிதத்தை மதிக்க வேண்டும் என்பதையே ஸ்ரான் சுவாமியின் வாழ்வுப்பாதை எமக்கு இவ் ஆய்வின் ஊடாக உணர்த்தி நிற்கிறது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9513
Appears in Collections:Christian & Islamic Civilization



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.