Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8896
Title: நல்லூர் இராசதானிகால தொல்லியல் சின்னங்களின் மீளுருவாக்கமும், அவற்றின் பாதுகாப்பும்
Authors: Sajitharan, S.
Keywords: யாழ்ப்பாண அரசு;மரபுரிமை;நல்லூர் இராசதானி;மீளுருவாக்கம்
Issue Date: 2018
Publisher: Jaffna Science Association
Abstract: இலங்கையின் அரச உருவாக்கத்தினைச் சங்ககாலத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் மரபு காணப்பட்டாலும் வட இலங்கையில் ஒரு மன்னன் ஆளுகைக்கு உட்பட்ட சுதந்திரத் தமிழரசு 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே நல்லூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்ததற்கே நம்பகரமான ஆதாரங்கள் காணப்படுகின்றன. இவ்வரசினையே தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தக் கூடியதாகவும் உள்ளது. கி.பி. 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் படைத்தளபதிகளான ஆரியச் சக்கரவர்த்திகள் தலமையில் இடம்பெற்ற இலங்கைப் படையெடுப்பின் விளைவே யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றமாகும். இவ்வரசே 1619 இல் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் வரை வட இலங்கையிலும், கிழக்கிலங்கையில் சில பிரதேசங்களிலும் ஆட்சியிலிருந்தது. தமிழ், வடமொழி, பாளி, சிங்கள நூல்கள் மற்றும் இலங்கை, தென்னிந்தியச் சாசனங்கள், நாணயங்கள், வெளிநாட்டார் குறிப்புக்கள் போன்ற பல வரலாற்று, தொல்லியல் மூலங்களால் அறியப்படும் யாழ்ப்பாண இராசதானியானது, இற்றைக்கு 380 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிடப்பட்ட நிலையில் அதற்குரிய கட்டிட, கலை மரபுகள் ஒன்றைத்தானும் முழுமையாக அடையாளம் காணமுடியாத நிலையே காணப்படுகின்றது. இதற்கு ஐரோப்பியர் கடைப்பிடித்த கலையழிவுக்கொள்கை ஒரு காரணமாக இருப்பினும் சுதேசிகளின் அசமாந்தப் போக்கும் முக்கிய காரணமாகும். இன்றைய நிலையில் யாழ்ப்பாண இராசதானி அமைந்திருந்த பிரதேசம் எனக் கருதும் இடங்களில் நெருக்கமான குடியிருப்புக்களும், வர்த்தக, அரச, வர்த்தக, அரச, அரசார்பற்ற நிறுவனங்களும் அமையப்பெற்றுள்ளன. இவ் இராசதானிக்குரிய நினைவுச் சின்னங்கள் பெரிதும் அழிவுக்குட்பட்டும், மறைக்கப்பட்டுமே உள்ளன. இற்றைக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிடப்பட்ட அநுராதபுர இராதானிக்குரியதான இடம், அதன் நினைவுச் சின்னங்கள் அரசமட்டத்திலான ஆதாரவுடன் உலகமரபுரிமை மையமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு முறையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது. எனினும் இலங்கையின் ஏனைய இராசதானிகளுக்குரிய நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதில் அரசமட்டத்தில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் அதற்குப் பல நூற்றாண்டுகள் பிற்பட்ட நிலையில் உள்ள யாழ்ப்பாண இராசதானிக்கு கொடுக்கப்படாமையே அதன் அழிவுக்கு முக்கியகாரணமாகும். எனினும் 340 வருடங்கள் வட இலங்கையில் நிலைபெற்ற சுதந்திரத் தமிழரசான யாழ்ப்பாண அரசு மறைந்தாலும் அதன் வரலாற்றை இன்றுவரை நினைவுபடுத்தும் இடமாக வட இலங்கை விளங்குகின்றது. இவ்வரசின் அரசியல், பொருளாதார, சமூக பாரம்பரியத்தினாலேயே ஈழத்தமிழரை யாழ்ப்பாணத் தமிழரோடு இணைத்துப் பார்க்கும் மரபு தொன்றுதொட்டுக் காணப்படுகின்றது. காலம் காலமாக அழிவுக்குட்பட்ட நிலையிலும், பின் வந்த கலைமரபுகளின் செல்வாக்கிற்கு உட்பட்ட நிலையிலும், முழுமையான பாதுகாப்பு முகாமைத்துவத்திற்கு உட்படாத நிலையிலுமே பின்வரும் தொல்லியல் மரபுரிமை எச்சங்களை யாழ்ப்பாண அரசர் காலத்திற்குரியதாக அடையாளம் காணமுடிகின்றது. மந்திரிமனை, சங்கிலியன் தோப்பு கல்தோரண வாசலும் அதற்க்குப் பின்னால் உள்ள செங்கல் கட்டிட எச்சங்கள், யமுனாஏரி, கோப்பாய் சங்கிலியன் கோட்டை, பண்டாரக் குளம், இராசாவின் தோட்டம், நல்லூர் இராதனிக்குரிய ஆலயங்கள் என்பவனவாகும். எனவே இவ் இராசதானிக்குரிய நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்படாமைக்கான காரணங்களைக் கண்டறிவதோடு, எஞ்சிய தொல்லியல் மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை ஆராய்வதாகவே இவ் ஆய்வுக் கட்டுரை அமைகின்றது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8896
ISSN: 1800-1289
Appears in Collections:History



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.