Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5209
Title: இலங்கையில் சைவசித்தந்தத்தின் வளர்ச்சிக்குப் பங்காற்றிய பிராமணர்கள்
Authors: சாந்தினி, அ.
Keywords: சைவசித்தாந்தம்;பிராமணர்;தமிழர்தத்துவம்;வேதாகமங்கள்;வடமொழி
Issue Date: 2017
Abstract: உலகவரலாற்றில் காலத்திக்குக்காலம் தத்துவார்த்தமான பல சிந்தனைகள் தோற்றம் பெற்றுள்ளன. ஒருவர் தாம்பெற்ற அனுபவத்திற்கும் அறிவுக்கும் ஏற்றவாறு தோன்றிய சிந்தனைகள் சூழலில் காணப்பட்டவற்றால் உதாரணங்களாகக் காட்டப்பட்டன. இப்பின்னணியில் இந்தியநாட்டில் தோன்றிய தத்துவங்களில் சைவசித்தந்தம் குறிப்பிடத்தக்க இடத்தினைப் பெறுகின்றது. இந்தியநாட்டை வடஇந்தியா, தென்னிந்தியாவென புவியியல் பண்பாட்டுப் பின்னணியில் நோக்குவதன் அடிப்படையில் தென்னிந்தியாவிற்குரிய தத்துவமாகவே சைவசித்தந்தம் வரையறுக்கப்படுகின்றது. அதிலும் தமிழ்நாட்டில் வாழ்கின்ற தமிழர், இலங்கையின் வடக்குக்கிழக்கில் பெரும்பான்மையாக வாழும் தமிழர் தத்துவமே சைவசித்தாந்தம் என்ற கருத்து ஆழமாக நிலைபெற்றிருப்பதைக் காணலாம். தமிழகத்தின் சூழலுக்கும் கருத்தியலுக்குமேற்ப வளர்ச்சியடைந்த சைவசித்தாந்தம் தத்துவத்தை நிலைநிறுத்தியமைக்கும் தொடர்ந்து பேணப்பட்டமைக்கும் பலர் பங்காற்றியுள்ளனர். இலங்கையில் குறிப்பாக வடஇலங்கையில் சைவசித்தந்தம் பேணப்படுவதில் பிராமணர்களுக்கு பிரதான பங்குள்ளது. ஏனெனில் அவர்கள் வேதஇலக்கியங்கள் உள்ளிட்ட இலக்கியங்களில் பயிற்சி பெற்றவர்களாகவும், வடமொழியை ஆன்மீக அறிவியல் மொழியாகவும், கட்டாயமாக அம்மொழியைக் கற்கவேண்டியவர்களாகவும் இருந்தனர். இந்நிலையானது சிலசந்தர்ப்பங்களில் சைவசித்தாந்தம் தொடர்பான முரண்பட்ட கருத்துக்களுக்கு விளக்கம் கூறவேண்டிய நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்தியதெனலாம்.இலங்கையில் மட்டுமன்றி தமிழகத்துடன் தொடர்புபட்டவகையிலும், இலங்கைப் பிராமணர்களின் சைவசித்தாந்தப்பணி அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்க அம்சமெனலாம். யாழ்ப்பாண சமூகநிலையில் மேலாண்மை பெற்றிருந்த வேளாளர்கள் சைவசித்தாந்தத்தின் வளர்ச்சிக்குப் பிரதானமான பங்களிப்புச் செய்தநிலையில் பிராமணர்களும் குறிப்பிட்டளவு பங்களிப்புச் செய்துள்ளனர் என்ற கருகோளின் அடிப்படையில் இவ்வாய்வு முன்னெடுக்கப்படுகின்றது. இலங்கையின் பிராமணர்கள் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை சைவசித்தாந்ததத்துவத்திற்கும் சைவசித்தின் மேன்மைக்கும் தம்மாலான பணிகளை வழங்கியிருந்ததை வரலாற்று ஆய்வுமுறையியல், விபரணஆய்வுமுறையியல் என்ற ஆய்வுமுறைகளின் அடிப்படையில் வெளிக்கொண்டுவருவதாக இவ்வாய்வு அமைகின்றது. பிராமணர்களால் ஆக்கப்பட்ட, பதிப்பிக்கப்பட்ட, மொழிபெயர்க்கப்பட்ட நூல்களையும் மற்றும் வெளியீடுகளையும் முதலாம்தரத் தரவுகளாகக் கொண்டும் அவர்கள் தொடர்பான நூல்கள் மற்றும் கட்டுரைகளை இரண்டாம்தரத் தரவுகளாகக் கொண்டும் இவ்வாய்வு நகர்த்தப்படுகின்றது. மேற்குறித்த காலகட்டத்தில் யாழ்ப்பாணத்துப் பிராமணர்கள் சைவசித்தாந்தத்திற்கு வழங்கிய பங்களிப்பினை வெளிக்கொணர்வதும், அவர்களது முயற்சியினால் சைவவுலகு பெற்றநன்மைகளை எடுத்துக்காட்டுவதும் இன்றையநிலையில் சைவசித்தாந்தம் தொடர்பான எண்ணம் அந்தணரிடையே அருகிவருவதை வெளிப்படுத்துவதும், சைவசித்தாந்தத்தை வளர்ப்பதற்கு தற்கால அந்தணர்களுக்கு தூண்டுதலளிப்பதும் இவ்வாய்வின் பெறுபேறுகளாக அமைகின்றன.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5209
Appears in Collections:Hindu Civilization



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.