Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13053
Title: பள்ளிமுனைக் கிராமத்தின் 'சாந்த லூசியா' நாடகப் பாரம்பரியம்: ஒரு கலை வரலாற்றுப் பார்வை
Authors: Mary Helan Perera, G.
Mary Winifreeda, C.
Keywords: கத்தோலிக்க நாடகம்;பள்ளிமுனைக் கிராமம்;சாந்த லூசியா;கலாசார அடையாளம்;சமூக பங்கேற்பு
Issue Date: 2026
Publisher: University of Jaffna
Abstract: பள்ளிமுனைக் கிராமத்தில் பாரம்பரியமாக மேடையேற்றப்பட்டு வரும் சாந்த லூசியா; நாடகம் ஈழத்துத் தமிழ்க் கத்தோலிக்கச் சமூகத்தின் சமய மற்றும் கலை மரபை ஒருங்கிணைக்கும் ஒரு தனித்துவமான நாடகக் கலை வடிவமாகும். சாந்த லூசியாவைப் பற்றிய பக்தி கத்தோலிக்கர்களிடையே பரவலாக இருந்தாலும் குறிப்பாக அவரைப் பற்றி எழுதப்பட்ட நாடக மரபின் தோற்றம், வளர்ச்சி, இலக்கிய நயம் மற்றும் சமூக புரிந்துணர்வு பற்றிய விடயங்களுக்கான ஆவணங்கள் அறியப்படாத நிலையிலுள்ளன. வாய்மொழி மரபில் உருவான முரண்பாடுகள் நாடகத்தின் வரலாற்றுத் தொடர்ச்சி மற்றும் கலைத்துவம் என்பவற்றைக் குறைவடையச் செய்து வரும் நிலையில், அதனை நிவர்த்தி செய்வதற்கான பிரதான முயற்சியாக இவ்வாய்வு அமைகின்றது. அதனடிப்படையில் ஆய்வானது சாந்த லூசியா நாடகப் பிரதியை ஆய்வுக்குட்படுத்தி, அதில் காணப்படும் சமூக மற்றும் கலைச் சிறப்புக்களை எடுத்துரைத்து, உள்ளூர் கலாசார அடையாளத்தில் இந்நாடகத்தின் மையத்தன்மையை எடுத்துரைப்பது பிரதான நோக்கமாகும். வாய்மொழிச் சான்றுகளை ஒழுங்குப்படுத்தி தெளிவான வரலாற்று புரிதலை வழங்குவதே இதன் துணை நோக்கமாகும். ஆய்வுக்கான தரவுகள் முதலாம் மற்றும் இரண்டாம் நிலை ஆதாரங்களின் முறையில் சேகரிக்கப்பட்டன. முதலாம் நிலை தரவாக நாடகத்தில் பங்கேற்ற கலைஞர்கள், அனுபவம் மிக்க பள்ளிமுனைக் கிராமத்து பெரியோர்களிடம் பெறப்பபட்ட நேர்காணல், பயிற்சி நிகழ்வுகளின் போது நேரடி அவதானிப்புகள் என்பன கள ஆய்வுகள் மூலம் இடம்பெற்றன. இரண்டாம் நிலை ஆதாரங்களாக திரு அவை செய்தித்தாள்கள், சஞ்சிகைகள், நூல்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு சேகரிக்கப்பட்ட தரவுகள் உய்த்துணர் மற்றும் வரலாற்று, கலாசார அணுகுமுறைகள் மூலம் தொகுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வின் மூலம் சாந்த லூசியா நாடகத்தின் தனித்துவச் சிறப்புக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக, நாடக ஆற்றுகையை பள்ளிமுனைக் கிராமத்தைச் சார்ந்த கனடிய கிறிஸ்தவர்கள் மட்டுமே நிகழ்த்துவது, பன்னிரு வயதிற்கு மேற்பட்ட பருவத்தினை அடைந்த பெண்கள் நாடகத்தில் நடிக்க அனுமதியின்மை மற்றும் நாடகத்திற்கான முழுப் பங்களிப்புக்களையும் ஆண்கள் மட்டுமே வழங்கலாம் என்ற தன்மையும் உள்ளன. அத்தோடு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை கட்டாயம் நாடக ஏடு அவிழ்க்கப்பட்டு, மேடையேற்றப்படுதல் வேண்டும் என்னும் பாரம்பரியமும், பள்ளிமுனைக் கிராமத்தைப் பூர்வீகமாக கொண்ட குடியினர் மாத்திரமே சாந்த லூசியா நாடக ஏட்டினை பார்ப்பதற்கோ தொடுவதற்கோ உரிமையுடையவர்கள் என்னும் நடைமுறையும் உள்ளன. அத்தோடு நாடகத்தைப் பயிற்றுவிப்பதில் கனடிய இன றோச் குடும்பத்தின் சிறப்பான பங்களிப்பு, மற்றும் நாடகத்திற்கானதும் ஆற்றுகையாளர்களுக்குமான சட்டங்கள் என்னும் இன்னும் பல இறுக்கமான தனித்துவ அம்சங்களை ஆய்வு அடையாளம் கண்டுள்ளது. இவ்வகையில் சாந்த லூசியா நாடகமானது ஈழத்துத் தமிழ்க் கத்தோலிக்க நாடக வரலாற்றில் தனிவத்துவ சிறப்பிடத்தைக் கொண்டுள்ளது என்பதை ஆய்வு தெளிவு படுத்தியுள்ளது. ஆய்வானது சாந்த லூசியா நாடகத்தின் கதைக்களம், இலக்கிய அமைப்பு மற்றும் கலை அம்சங்களை விபரித்து அதன் தனித்துவத்தை வெளிப்படுத்துவதாக அமைகின்றது. ஈழத்து தமிழ் கத்தோலிக்கரின் கலை, இலக்கிய வரலாற்றில் தனித்துவமான சின்னமாகிய குறித்த நாடகத்தையும், அதன் பிரதியையும் குறித்த ஆய்வானது ஆவணப்படுத்துவதாக அமைகின்றது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13053
Appears in Collections:Christian & Islamic Civilization



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.