Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10674
Title: இலங்கையின் சில்லாலைக் கிராமத்தில் மறைப்பணியாளர் யோசவ்வாஸ்
Authors: Paul Rohan, J.C.
Kelan Velaijini, A.
Keywords: கத்தோலிக்கம்;கல்வினிசம்;செவிவழிக்கதைகள்;மறைப்பணி;ஆவணப்படுத்தல்
Issue Date: 2023
Publisher: University of Jaffna
Abstract: இலங்கையின் வடபகுதியிலுள்ள சில்லாலைக் கிராமம் பாரம்பரியக் கத்தோலிக்க மரபை உள்ளடக்கியதாகக் கருதப்படுகின்றது. வரலாற்று ரீதியான சான்றுகளின்படி போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்திலேயே கத்தோலிக்க மரபு சில்லாலைக் கிராமத்திற்கு சென்றிருந்ததாகக் கருதப்பட்டாலும், போர்த்துக்கேயர் வரவுக்கு முன்னரே சில்லாலையில் கத்தோலிக்க மரபு நிலைபெற்றிருந்திருக்கலாம் என்பது பல வரலாற்றாய்வாளர்களின் உத்தேசமாகும். போர்த்துக்கேயரையடுத்து வருகைதந்த குடியேற்ற வாதிகளான ஒல்லாந்தர் இலங்கை முழுவதிலும் கத்தோலிக்க மரபைத் தடை செய்தனர். ஆயினும் சில்லாலைக் கிராமத்தில் கத்தோலிக்க மரபு மறைமுகமாகப் பேணப்பட்டது. இப்பின்னணியில் இந்தியாவின் கோவாப்பகுதியைச் சேர்ந்த மறைப்பணியாளர் யோசவ்வாஸ் அவர்களின் வருகையானது இலங்கை மக்களின் கத்தோலிக்க மரபைப் பாதுகாக்கத் துணை செய்தது. அவரது இலங்கைப்பணி சில்லாலைக் கிராமத்திலேயே ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். மறைப்பணியாளர் யோசவ்வாஸ் அவர்கள் சில்லாலைக் கிராமத்தில் ஆற்றிய பணி பற்றிய தரவுகளை வரலாற்றுரீதியாக ஆவணப்படுத்தும் முனைப்புடன் இவ்வாய்வு முன்னெடுக்கப்படுகின்றது. இலங்கையில் மறைப்பணியாற்ற வந்த யோசவ்வாஸ் அவர்களின் பணிக்குச் சில்லாலைக் கிராமம் ஆரம்பப் புள்ளியாக அமைந்தமைக்கான காரணங்களைக் கண்டறிவதும் இவ்வாய்வின் பிரதான இலக்குகளில் ஒன்றாகும். இக்;கிராமத்தில் யோசவ்வாஸ் அவர்களின் மறைப்பணி பற்றிய பல பாரம்பரியச் சான்றுகளும், செவிவழிக் கதைகளும் ஆவணப்படுத்தப்படாமல் காணப்படுகின்றன. அவற்றைச் சேகரித்து, உண்மைத் தன்மையை அறிந்து தொகுப்பதிலுள்ள சிக்கல் ஆய்வுப் பிரச்சினையாக முன்வைக்கப்படுகின்றது. இதனடிப்படையில் இவ்வாய்வில் இலங்கைக் கிறிஸ்தவ வரலாற்றில் ஒல்லாந்தர் காலத்தில் கத்தோலிக்க மக்களின் நிலை, மறைப்பணியாளர் யோசவ்வாஸ் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புக்கள், அவரை இலங்கைக்கு மறைப்பணியாற்ற வருவதற்கு உந்திய காரணங்கள் ஆகியன முன்வைக்கப்பட்டு, சில்லாலைக் கிராமத்தில் அவரது ஒட்டுமொத்த இலங்கைப்பணியும் ஆரம்பித்த விடயங்கள் மையப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் கத்தோலிக்கர்களின் நிலை பற்றிய வரலாற்றுத் தகவல்களை அறிந்து கொள்ள வரலாற்று ஆதார முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. மறைப்பணியாளர் யோசவ்வாஸ் அவர்களின் குடும்பப் பின்னணி பற்றிய தரவுகளைத் தொகுப்பதற்கு தொகுத்தறிவு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சில்லாலைக் கிராமத்தில் யோசவ்வாஸ் அவர்களின் பணி பற்றிய ஆவணப்படுத்தப்படாத தகவல்கள் காணப்படுகின்றமையினால் இவற்றின் உண்மை தன்மையை அறிந்து கொள்ள உய்த்தறிவு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆய்வு தொடர்பான தரவுகள் மூல நூல்கள், துணை நூல்களிருந்தும், நேர்காணல்கள், அவதானிப்பு முறை மூலமாகவும் பெறப்பட்டுள்ளன. இவ்வாய்வின் ஊடாக மறைப்பணியாளர் யோசவ்வாஸ் அவர்களின் பணியின் தனித்துவத்தை அறிந்து கொள்ள முடிகின்றது. மேலும் அவர் பணியாற்றிய காலத்தில் சில்லாலைக் கிராமமக்கள் கத்தோலிக்க மரபுமட்டில் கொண்டிருந்த உறுதிப்பாட்டையும் புறவயரீதியில் அறிந்து கொள்ள முடிகின்றது. செவிவழியாகப் பேணப்பட்டு வரும் தகவல்கள் அழிந்து போகாமல் வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என்ற கருதுகோள் மெய்ப்பிக்கப்படுகிறது. இவ்வாறு ஆவணப்படுத்தப்படும் விடயங்கள் சமகால மறைப்பணியாளர்களுக்கும் பொதுநிலையினருக்கும் அவர்களின் பணிபற்றிய நோக்கை உணர்ந்து கொள்வதற்கு உறுதுணையாக அமையலாம் என்பது ஆய்வின் பயன்பாடாக எதிர்பார்க்கப்படுகின்றது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10674
Appears in Collections:Christian & Islamic Civilization



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.