Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5195
Title: தமிழர்களுடைய மரணச்சடங்குகளில் வழக்கிழந்து வரும் ஒப்பாரிப்பாடல்கள் (யாழ்ப்பாணத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)
Authors: Aniththa, S.
Keywords: யாழ்ப்பாணம்;பண்பாடு;ஒப்பாரி;சடங்குகள்;பெண்கள்
Issue Date: 2019
Publisher: University of Jaffna
Abstract: இலங்கையில் தமிழர்களுடைய பாரம்பரிய பண்பாட்டினை வளம்படுத்திய பிராந்தியங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது. பண்டுதொட்டு அநுராதபுரத்திற்கு வடக்கே யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடஇலங்கை பாளி மொழியில் நாகதீபம் தமிழில் நாகநாடு எனத் தனித்து அடையாளப்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதற்கு இப்பிராந்தியத்தில் தோன்றி வளர்ந்த தனித்துவமான பண்பாடும் ஒரு காரணம் என்பதை வடஇலங்கையில் சிறப்பாக யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் ஆய்வுகள் உறுதி செய்கின்றன. இத்தகைய பாரம்பரிய பண்பாட்டுச் சிறப்புக்களைக் கொண்ட யாழ்ப்பாண மக்களின் வாழ்வியலோடு இரண்டறக்கலந்த பண்பாட்டுக் கூறாக சடங்குகள் காணப்படுகின்றன. சமகாலத்தில் மாறிவரும் புதிய பண்பாட்டுச் சூழலினால் யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய சடங்குகள், பண்பாட்டுக் கூறுகள், சின்னங்கள், அடையாளங்கள் மாற்றமடைந்தும் மறக்கப்பட்டும் மருவியும் வருகின்றன. மனிதவாழ்க்கை வட்டச்சடங்குகளில் இறுதியாக அமைவது மரணச்சடங்கு அல்லது இறப்புச்சடங்கு ஆகும். யாழ்ப்பாண மக்களின் மரணச்சடங்குகளில் பாரம்பரிய நிகழ்வுகளாக வெள்ளை கட்டுதல், தோரணங்கட்டுதல், தட்டைப்பந்தல் அமைத்து பச்சை ஓலைகளால் வேய்தல், குளிப்பாட்டுதல், பால்வார்த்தல், தீப்பந்தம் பிடித்தல், ஒப்பாரி பாடுதல், வாய்க்கரிசி போடுதல் போன்றன இடம்பெற்று வந்துள்ளன. இவற்றுள் தட்டைப்பந்தல் அமைத்து பச்சை ஓலைகளால் வேய்தல், வெள்ளை கட்டுதல், ஒப்பாரி பாடுதல் போன்றன சமகாலத்தில் வழக்கிழந்து வருகின்றன. இத்தகைய மாறிவரும், வழக்கிழந்து வரும் பண்பாட்டுக் கூறுகளில் முக்கியம்பெற்ற அம்சமாக ஒப்பாரிப்பாடல்கள் காணப்படுகின்றன. இதனால் யாழ்ப்பாணத்தில் மாறிவரும் புதியபண்பாட்டுச் சூழலுக்கான காரணங்களை கண்டறிதல், எமக்குரிய பாரம்பரிய பண்பாட்டுக் கூறாக விளங்கும் ஒப்பாரிப்பாடல்களை வயோதிபப் பெண்களிடம் இருந்து கேட்டு எழுத்துருவாக்கி ஆவணப்படுத்தி பிற்கால சந்ததியினருக்கு வழங்குதல் மற்றும் எதிர்கால சந்ததியினரும் எமது பண்பாட்டினைப் புரிந்து அவற்றைப் பேணுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் முதலான நோக்கங்களைக் கொண்டதாக இவ்வாய்வு அமைந்துள்ளது. இவ்வாய்வுக்காக முதலாம் நிலைத்தரவுகள், இரண்டாம் நிலைத்தரவுகள் என்ற அடிப்படையில் சான்றுகள், ஆதாரங்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. முதலாம் நிலைத்தரவுகள் என்ற அடிப்படையில் ஒப்பாரி பற்றிய சொற்பதங்கள், செய்திகள் வரும் இலக்கியங்களான தொல்காப்பியம், புறநானூறு, பன்னிருபாட்டு, தமிழ் அகராதிகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டும், இரண்டாம் நிலைத்தரவுகள் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் மாறிவரும் பண்பாட்டுச் சூழலுக்கான காரணங்கள் மற்றும் ஒப்பாரிப்பாடல்கள் போன்றவை பற்றிக்கூறும் நூல்கள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள் போன்றவற்றோடு நேர்காணல்கள் ஊடாகவும் தகவல்களை திரட்டி இவ்வாய்வு மேற்கொள்ளப்படும். ஆரம்பகால கட்டங்களில் யாழ்ப்பாணத்தில் மரணவீடுகளில் ஒப்பாரி பாடுதல் என்பது யாழ்ப்பாண மக்களின் மரணச்சடங்குகளில் ஒரு முக்கிய நிகழ்வாகவும், பாரம்பரிய மரபாகவும் இருந்து வந்துள்ளது. யாழ்ப்பாணப் பெண்கள் இறந்தவர்களை நினைத்து, இறைவனை நிந்தித்து, விதியின் கொடுமையை நொந்து, இறந்தவரை நேசித்த விதத்தையும், இறந்தவரின் பெருமையையும் அவருடைய குணநலன்களையும், அவர் பிறரால் போற்றப்பட்ட முறையையும், அவரது இறப்பினால் தனக்கு ஏற்பட்டுள்ள ஏற்படப்போகும் அவல நிலையையும், குடும்பத்தின் நிலையையும் சோக உணர்ச்சியுடன் எதுகை, மோனை, உவமை, பொருளற்ற ஓசைநயம், வர்ணணைகள், வினாவிடைகள் என்ற அடிப்படையில் சோகஉணர்வாகப் பாடிவந்தனர். ஒப்பாரி சொல்லி வாய்விட்டு அழுவது என்பது இவர்களுடைய வாழ்வியலின் முக்கிய பண்பாட்டுக் கூறாக மட்டுமன்றி உளவியல் மருத்துவ முறையாகவும் இருந்து வந்துள்ளது. ஆனால் இன்று ஒப்பாரி பாடுதல் மரபானது யாழ்ப்பாணத்தில் ஒருசில கிராமங்களில் மட்டும் வயோதிபப் பெண்களால் மட்டுமே மிகஅரிதாகப் பாடப்பட்டு வருவதையே அவதானிக்க முடிகின்றது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5195
ISSN: 2550-2360
Appears in Collections:History



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.