Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11636
Title: பௌத்த கலை மரபுகளில் காந்தாரக் கலையின் சிறப்பம்சங்கள் - ஓர் வரலாற்றாய்வு
Authors: Dinosha, S.
Keywords: பௌத்த கலைமரபுகள்;காந்தாரக்கலை;சிற்பங்கள்;புத்த உருவம்;முத்திரைகள்;பௌத்த பண்பாடு
Issue Date: 2021
Publisher: Buddhist and Pali University of Sri Lanka
Abstract: ஆதிகால மனிதன் செம்மைத்தன்மையினை அறியும் பொருட்டு தன் உழைப்பினால் கலையினைப் பிறப்பித்தான். இவ்வாறு ஆதி மனிதனால் படைக்கப்பட்ட கலையானது இன்று பல உந்தல் காரணிகளால் வரையறைக்கு உட்பட்ட நோக்கப்படுகின்றது. கலை என்பது அளவும் வகையில் பொருத்தமும் தன்னுள் அடங்கி நிற்பது எனப் பொருள்படும். மா.இராசமாணிக்கனார் கலைதொடர்பில் பின்வருமாறு தனது கருத்தை கூறுகின்றார். "மனிதனது உள்ளத்தை தன் வயமாக்கி நிரம்பி, 60அவ்வளவோடு நில்லாமல் வெளிப்படும் ஆற்றலே கலை ஆகும்” என்கின்றார். அவ்வாறு வளர்ந்த கலைகளின் எண்ணிக்கை அறுபத்து நான்கு என மணிமேகலை கூறுகிறது. ஆனால் மனிதனுடைய மனத்தில் உணர்ச்சியை எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கின்ற பண்பு அழகுக் கலைகளுக்கு உண்டு. அத்தகைய அழகுக்கலைகள் ஐந்து வகைப்படும் என மயிலை சீனி வேங்கட சாமி குறிப்பிடுகின்றார். அவை கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, காவியக்கலை ஆகும். இத்தகைய கலை அம்சங்களில் கட்டடக்கலைக்கு அடுத்த படியாக உள்ளது சிற்பக்கலையாகும். கட்டடக்கலையை விட சிற்பக்கலை நுட்பமானதாகவும் கருதப்படுகின்றது. சிற்ப உருவங்களை (I) முழு உருவச் சிற்பங்கள் (II) புடைப்பு சிற்பங்கள் என இரு வகைப்படுத்தலாம். பொருட்களின் முன்புறம், பின்புறம் உட்பட முழு உருவமும் தெரிய அமைக்கப்படுவது முழு உருவச் சிற்பங்கள் எனவும், Bas relief என அழைக்கப்படும் புடைப்புச்சிற்பங்கள் என்பது ஒரு புறம் மட்டுமே தெரியும் படிச் சுவர்களிலும் பலகைகளிலும் கல்லிலும் அமைக்கப்படுவது. இத்தகைய சிற்பக்கலையின் சிறப்புக்கள் பௌத்த கலை மரபுகளிலும் பெருமளவிலான செல்வாக்கை செலுத்துகிறது. புத்தர் மனித உருவில் உருவில் காட்டாத தொன்மைக் காலத்தில் அதாவது தேரவாத பெளத்தம் பிரிவு காலத்தில் புத்தரின் குறியீடுகளான பாதச்சுவடுகள், தர்மச் சக்கரம், மரம், குடை, ஆகியவை சிற்பங்களில் இடம் பெற்றன. பிற்பட்ட காலங்களில் புத்தரை மனித உருவில் சிற்பமாக வடிக்காத தேரவாத பெளத்தம் வலிமை குன்றிய போது மகாயான பிரிவு தோன்றி புத்தரை மனித உருவில் வணங்கத் தொடங்கினர். அப்போது புத்தரின் வடிவங்கள் பௌத்த கலை மரபுகளில் தோன்றி வளர்ந்தன. காந்தாரம், மற்றும் மதுரா பகுதிகளில் கி.பி நான்காம் நுற்றாண்டுகளில் தோன்றி வளர்ந்த பௌத்த கலைகள் புத்தரின் வடிவங்களை அறிமுகப்படுத்தின. இதைத் தொடர்ந்து புத்தர் மற்றும் பௌத்த சமயத் தெய்வங்களின் உருவ அமைப்பு படிமக் கலை (Iconography) தோன்றியது. இத்தகைய சிறப்பம்சங்களின் அடிப்படையில் கனிஷ்கர் (கி.பி 78- 120) காலத்தில் உருவான "காந்தாரமக் கலை" யில் புத்தரின் உருவம் முதன் முதலாக வடிக்கப்பட்டது. இவ்வாறு வடிக்கப்பட்ட காந்தாரக்கலை சிறப்பம்சங்கள் வெளிப்படுத்தும் பௌத்தக்கலை மரபுகளின் சிறப்புக்களை நுணுக்கமாக ஆராயும் பொருட்டு இவ் ஆய்வுக்கட்டுரை எழுதப்படுகின்றது. அதன் அடிப்படையில் பௌத்த கலை மரபுகளின் காந்தாரக்கலை மரபுகளும் அம்மரபுகள் சார் அம்சங்களும் பௌத்த கலை மரபுகளிற்கு அடித்தளமாக அமைந்துள்ளது என்பதே இவ் ஆய்வின் கருதுகோளாக அமைகின்றது. கி.பி ஒன்று முதல் மூன்று வரையான மூன்று நுற்றாண்டுகளில் சிறப்பாக வளர்க்கப்பட்ட காந்தாரக்கலையானது புத்தரது உருவங்களை நின்ற நிலையில், அமர்ந்த நிலையில், கிடந்த நிலையில் என வடிவமைக்கப்பட்டதுடன் முத்திரைகளை புத்தரின் கரங்களோடு இணைத்தும் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதாவது தியான முத்திரை, வரத முத்திரை, அபயமுத்திரை, விதர்க்க முத்திரை, தர்மச்சக்கர முத்திரை, பூமிஸ்பர்ச முத்திரைகள் என்பனவாகும். இவை காட்டும் காந்தாரச் சிற்பங்களின் சிறப்பானது அமைதிகளை (Iconography) உருவாக்குவதேயாகும். இத்தகைய கலைப்படைப்புக்களை இந்திய கிரேக்கப் பண்பாடு அல்லது கிரேக்க உரோமானியப் பண்பாடு எனக் கருதுவதுண்டு. காந்தார சிற்பமானது தற்போது பிரித்தானிய அருங்காட்சியத்தில் 33ஆம் எண் அறையில் உள்ளது, இத்தகைய சிற்பத்தின் தன்மையினை முழுமையாக ஆராய்வதும் அதன் அடிப்படையில் காந்தாரக் கலை மரபுகள் பின் வந்த பெளத்த கலை மரபுகளின் வளர்ச்சியில் எத்தகைய தாக்கத்தை வெளிப்படுத்தியது என்பதை கண்டறிவதும் இவ் ஆயிவின் பெறுபேறாகும்.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11636
Appears in Collections:History



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.