<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
<channel>
<title>IHC2022</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9332</link>
<description/>
<pubDate>Mon, 06 Apr 2026 14:03:45 GMT</pubDate>
<dc:date>2026-04-06T14:03:45Z</dc:date>
<item>
<title>மட்டக்களப்புத் தேசத்து வைஷ்ணவ சம்பிரதாயங்களும், சித்தாந்தங்களும் – கஞ்சன் அம்மானையினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9412</link>
<description>மட்டக்களப்புத் தேசத்து வைஷ்ணவ சம்பிரதாயங்களும், சித்தாந்தங்களும் – கஞ்சன் அம்மானையினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
Megala, S.; Mugunthan, S.
இந்து எனும் சட்டகத்தினுள் வைதின சமயங்கள் அனைத்தும் இணைவு பெற்று விளங்குவது மட்டக்களப்பு தேசத்து சமய மரபின் சிறப்பம்சமாகும். அம்மன், சிவன், முருகன், விஷ்ணு, குமாரர் என ஒவ்வோர் வழிபாடும் ஒவ்வொரு பண்பாட்டுத் தளத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளது. இத்தேச வைஷ்ணவ மரபில் விஷ்ணு, திரௌபதை ஆலயங்கள் எண்ணிக்கையில் குறைவெனினும் அவ்வாலயச் சடங்குகள் தனித்துவமும் சிறப்பும் வாய்ந்தவை. புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை மட்டக்களப்புக் கலாசாரம் மகாபாரதக் கலாசாரம் என கூறுவதற்கமைய இத்தேசத்துக் கலை, இலக்கியங்கள் மகாபாரத கலாசாரப் பண்புகளைக்  கொண்டவையாகத் திகழக்காணலாம். இங்குள்ள வைஷ்ணவ இலக்கியங்களின் வரிசையில் அம்மானைகள் தனித்துவம் பெறுகின்றன. அந்தவைகையில் பாரத அம்மானை, கஞ்சன் அம்மானை, வைகுந்த அம்மானை, இராமர் அம்மானை என்பன கவனத்திற்குரியன. பகவானின் பூர்ணாவதாரங்களில் ஒன்றாக அமைவது ஸ்ரீகிருஷ்ண அவதாரமாகும். கண்ணனாகப் பிறந்து வளர்ந்து கஞ்சனை வதம் செய்வதைப் பற்றி எடுத்துரைப்பதே ”கஞ்சன் அம்மானை” ஆகும். கஞ்சன் வத்த்தினை பாடுபொருளாகக் கொண்ட இவ்வம்மானை மட்டக்களப்பு தேசத்து விஷ்ணு ஆலயங்களில் பூசிக்கப்படும் புனிதச் சின்னமாகவும், பூசைகளை நெறிப்படுத்தும் பனுவலாகவும் திகழ்கின்றது. இவ்வம்மானை சமய இலக்கியமாக மாத்திரமின்றி பொதுமக்கள் இலக்கியமாகவும் திகழும் சிறப்பிற்குரியது. மட்டக்களப்பு தேசத்தின் வைஷ்ணவ சமய மரபின் முக்கிய பனுவலாகத் திகழும் இவ்வம்மானையினை மையப்படுத்திக் கட்டமைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு தேசத்தின் வைஷ்ணவ சம்பிரதாயங்களையும், அம்மானையில் இழையோடுகின்ற வைஷ்ணவ சித்தாந்தங்களையும் வெளிக்கொணர்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும். சமய மரபிலும் தத்துவ மரபிலும் பன்மைத் தன்மையைக் கொண்டு துலங்குகின்ற இத்தேசத்து மரபில் வைஷ்ணவ சித்தாந்தத்தை அடையாளப்படுத்த முனைகின்ற இவ்வாய்வில் விபரண ஆய்வு முறையியலே அதிகம் கையாளப்படுகின்றது. அவசியமான இடங்களில் வரலாற்றியல் மற்றும் ஒப்பாய்வு முறையியல்களும் கையாளப்படுகின்றன. கஞ்சன் அம்மானையில் பேசப்படும் வைஷ்ணவ சித்தாந்தச் சார்புடைய ஈஸ்வரனின் பரத்துவம், வைணவ மரபில் ஈஸ்வரனுக்குக் குறிப்பிடப்படும் ஐந்து நிலைகளான பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்பன பற்றிய செய்திகள், வாசுதேவனின் வியூகங்கள் பற்றிய செய்திகள், ஈஸ்வரனின் மங்கல கல்யாண குணங்கள், சரீரசரீரி சம்பந்தம், பரிணாமவாதம், வினைகளிலிருந்து மீள்வதற்கான வழிகள், பொன்னுலகு எனப்படும் முக்திநிலை ஆகிய விடயங்கள் தொடர்பில் இக்கட்டுரை கருத்துக்களை முன்வைத்துள்ளது.
</description>
<pubDate>Sat, 01 Jan 2022 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9412</guid>
<dc:date>2022-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item>
<title>மட்டக்களப்பு தேசத்து வழிபாட்டு மரபுகளில் பத்ததிகள் – கன்னன்குடா கண்ணகையம்மன் பத்ததியை அடிப்படையாகக் கொண்ட சிறப்பாய்வு</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9411</link>
<description>மட்டக்களப்பு தேசத்து வழிபாட்டு மரபுகளில் பத்ததிகள் – கன்னன்குடா கண்ணகையம்மன் பத்ததியை அடிப்படையாகக் கொண்ட சிறப்பாய்வு
Kunabalasingam, V.
இலங்கையின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை 1960களுக்கு முன்னர் மட்டக்களப்பு தேசம் என அழைக்கும் வழக்கம் நிலவியது. மட்டக்களப்பு தேசத்தில் வழக்கிலுள்ள வழிபாட்டு மரபுகளை இருபெரும் பிரிவுகளாக வகைப்படுத்தி நோக்க முடியும். அவற்றிலே ஆகம சிற்பசாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்படுவது ஒரு வகை, மற்றைய வகை, மரபு வழியாகப் பேணப்பட்டும், பத்ததிகளை ஆதாரமாகக் கொண்டும் இயற்றப்படுவது ஆகும். மேற்குறிப்பிட்ட இரண்டாம் வகைக்குரிய வழிபாட்டு மரபுகளே இப்பிராந்தியத்தில் பிரசித்தமானவை. இவ்வகை வழிபாட்டில் பத்ததிகளின் வகிபாகம் இன்றியமையாதது. வழிபாட்டிற்குரிய பூசைவிதி முறைகளையும் அதற்கான மந்திரங்களையும், பாவனைகளையும் தொகுத்துக் கூறும் விதி நூலே பத்ததிகள் ஆகும். பத்ததியைப் பத்தாசி எனவும் அழைப்பர். பத்தாசி என்பது மட்டக்களப்பு தேசத்து மக்கள் மத்தியில் பயில்நிலையில் உள்ள பிரதேச வழக்காற்றுச் சொற்பதமாகும். அவற்றிலே பல உப்பிரிவுகளும் உள்ளன. கண்ணகையம்மன் பத்ததியில், கூனற்பலகை விதிமுறை, திரைசேர்மடந்தைப்பத்ததி, சிந்களப்பத்ததி, குளக்கட்டுப்பத்ததி எனப் பல உப்பிரிவுகளும் உண்டு. இவை பிரதேசத்திற்குப் பிரதேசம் கோயிலுக்குக் கோயில் வேறுபடுகின்றன. கன்னன்குடா கண்ணகையம்மன் கோயில் வழிபாட்டுக்கு ஆதாரமான பத்ததி கூனற்பலகை விதிமுறையாகும். இப்பத்ததியில் பூசகர் விதிமுறை, கங்கை அரட்டுதல் (தீர்த்தம் எடுத்தல்) கதவு திறத்தல், கும்பம் வைத்தல், மடை வைத்தல், மந்திரப்பானை, செயல்முறை, யந்திரங்கள் முதலிய இன்னோரன்ன அம்சங்கள் காணத்தக்கன. பத்ததிகள் வழிபாட்டை நெறிப்படுத்தும் விதிநூல்கள் உன்ற வகையில் அவற்றின் தோற்றம் தொடர்பான காலத்தினை அறிதல், ஏனைய தெய்வ வழிபாடுகளைக் கூறுகின்ற பத்ததிகளுடன் கூனற்பலகை விதிமுறையினை ஒப்பு நோக்குதல், பொதுவாக பத்ததிகளுக்கிடையிலான பொதுமைகளையும், தனித்துவங்களையும் இனங்காணுதல் முதலியன இவ்வாய்வின் நோக்கங்களாகும். இவ்வாய்வுக்கு முதல்நிலைத் தரவுகளாகத் தற்காலத்தில் வழக்கிலுள்ள பத்ததிகளும், இரண்டாம் நிலைத்தரவுகளாகப் பத்ததிகள் தொடர்பாக வெளிவந்துள்ள நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், இணையத்தளக் குறிப்புகள் ஆகியன உபயோகிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் இந்த ஆய்வு வரலாற்றியல் ஆய்வு முறையியல், விபரண ஆய்வு முறையியல் மற்றும் ஒப்பீட்டு ஆய்வு முறையியைலைப் பின்பற்றிச் செய்யப்படுகின்றது. ஆய்வின் முடிவாக, மட்டக்களப்பில் பத்ததி முறையிலான வழிபாடுகள் சமஸ்கிருதமயமாக்கம் காரணமாகத் தனித்துவங்களை இழந்து வரும் அதேவேளை பழைமையான பத்ததிகளும் மறைபொருளாக்கப்பட்டுள்ளன. பத்ததிகளைக் குறித்த பரம்பரையினர் தவிர ஏனையோர் கைகளுக்கு சேரக்கூடாது என்ற மனோநிலை காரணமாக பல பத்ததிகள் அழிந்து  போயுள்ளன. எஞ்சியுள்ள பத்ததிகளில் கன்னன்குடா கண்ணகையம்மன் பத்ததியும் ஒன்று. இப் பத்ததி வாய்மொழி மரபாக இருந்து, ஏட்டு வடிவில் எழுதப்பெற்று பின்னர் கையெழுத்துப் பிரதியாக மாற்றம் பெற்று அச்சுருப்பெற்றுள்ளமை மட்டக்களப்பில் பத்ததி தொடர்பாக்க் காணத்தக்க ஒரு சிறந்த முன்னேற்றமாகும்.
</description>
<pubDate>Sat, 01 Jan 2022 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9411</guid>
<dc:date>2022-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item>
<title>வடமராட்சிப் பிரதேசத்தின் சிறுதெய்வ வழிபாடு – ஒரு நோக்கு</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9410</link>
<description>வடமராட்சிப் பிரதேசத்தின் சிறுதெய்வ வழிபாடு – ஒரு நோக்கு
Nijitha, S.; Bavanesan, V.
சைவமக்கள் இரண்டு வகையான வழிபாட்டு முறைகளைக் கையாள்கின்றனர். ஒன்று ஆகம வழிபாட்டு முறையாகும். மற்றையது ஆகமம் சாராத கிராமிய வழிபாட்டு முறையாகும். இக்கிராமியத்தெய்வத்தினை குல தெய்வம், நாட்டார் தெய்வம், சிறுதெய்வம் எனவும் அழைக்கின்றனர். இவ்வழிபாடானது கிராமப் புற மக்களின் வழிபாடாகவும் காணப்படுகின்றது. யாழ்பாணக் குடாநாட்டின் வடக்குக் கிழக்குப் பகுதியாக வடமராட்சிப் பிரதேசம் அமைந்திருக்கிறது. வடமராட்சிப் பிரதேசத்தில் பாரம்பரியமாக்ப் பேணப்பட்டு வந்த இவ்வழிபாடானது ஆகமம்மயாக்கலுக்கு உள்ளாகாமல் தொடர்ந்து பேணப்டுகிறது. இப்பிரதேசத்தில் சிறு தெய்வ வழிபாட்டிடங்களும், வழிபாட்டு முறைகளும் சிறப்பிடம் பெறுகின்றன. இப்பிரதேசத்தில் சிறுதெய்வங்களான காளி, காத்தவராயன், நரசிம்மர் பூதவராயர், மாடன், முனி, வாலையம்மன், முதலிப்பேச்சி, வீரபத்திரர், நாகதம்பிரான், வைரவர், காத்தாசி, கன்னியம்மன், அம்மிணி, பிள்ளையார், ஐயனார், கண்ணகியம்மன், நாச்சியார், அண்ணமார், முருகன், மாரியம்மன், சீதையம்மன், முனியப்பர், பெரியதம்பிரான், ஆஞ்சநேயர், விறுமர், முதலி, மோகினி, திரௌபதியம்மன் ஆகியவற்றிற்கான கோவில்கள் காணப்படுகின்றன. இங்கு பெரும்பாலும் மரத்தடி, குளம், ஏரி போன்றவற்றிற்கு அருகிலும் திறந்த வெளிகளிலும், பெரிய மரங்களின் கீழும் தெய்வமாகக் கருதி வழிபடத்தக்க வேல், கல், சூலம் போன்றவற்றை வைத்து வழிபாடு செய்கின்றனர். சில இடங்களில் பீடங்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது வழிபடுவோரின் பொருளாதார நிலைக்கேற்ப கோயில் அமைப்பும் தெய்வ உருவங்களும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. மக்கள் தம் சமூகத்தின் விருப்பு வெறுப்புகளுக்குத் தக்கவாறு வழிபாட்டு முறைகளை அமைத்துக் கொள்கின்றனர். இந்த ஆய்வின் நோக்கம் இப்பிரதேச ஆலயங்களின் கிராமிய வழிபாட்டின் சிறப்பினை இளம் தலைமுறையினருக்குக் கையளிப்பதுடன் கிராமிய வழிபாட்டின் சிறப்பினை வெளிக்கொணர்தலும் ஆகும். இந்த ஆய்வானது வரலாற்றியல் ஆய்வு முறையாகவும், ஒப்பீட்டு ஆய்வு முறையாகவும் காணப்படகின்றது. ஆலயங்கள் தொடர்பான வரலாற்று நூல்களும் கள ஆய்வும் முதனிலைத் தரவாக கொள்ளப்படுகின்றது. மேலும் மாநாட்டு மலர்கள், பருவ இதழ்கள், ஆய்வுக் கட்டுரைகள், கும்பாபிஷேக மலர்கள் போன்றன இரண்டாம் நிலைத் தரவுகளாகவும் அமைகின்றன. தேவையேற்படுகின்ற போது இவ்வழிபாடு பற்றி உரியவர்களிடம் செவ்வி காணலும் இடம்பெறுகின்றது.
</description>
<pubDate>Sat, 01 Jan 2022 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9410</guid>
<dc:date>2022-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item>
<title>திருவாசகப் பாடல்களில் அழுகையெனும் மெய்ப்பாடு</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9409</link>
<description>திருவாசகப் பாடல்களில் அழுகையெனும் மெய்ப்பாடு
Seranchan, S.
நாயன்மார்களில் ஒருவராகத் திகழும் மாணிக்கவாசகரின் திருவாசகமானது பன்னிரு திருமுறைகளின் வரிசையில் எட்டாந் திருமுறையில் வைத்துப் போற்றப்படுகிறது. தெய்வத்தன்மை வாய்ந்த வாசகம் “திருவாசகம்”என்னும் சொல்லுக்கமைய இது ஐம்பத்தொரு பதிகங்களால் தத்துவக் கருத்துக்களையும், வாழ்வியல் கோட்பாடுகளையும், பக்திச் சுவையையும் விளக்குவதாக அமைந்துள்ளது. திணிந்த இருளில் கட்டுண்டு கிடக்கும் ஆன்மா பேரொளியைத் தேடிச்செல்லுங்கால் தோன்றும் பல வகையான நிகழ்ச்சிகளையும், உணர்ச்சிகளையும் சுவைபொதிந்த திருப்பதிகங்களால் எடுத்தோதும் தெய்வீகக் கவிதையாகவும் இது விளங்குகின்றது. திருவாசகத்தை பக்திப் பாடலாக மட்டும் பார்க்காமல் அதனை கவிதையாக பார்க்க வைப்பது அதன் கண்ணுள்ள உவமைகளும், மெய்ப்பாடுகளுமேயாகும். இவையே கவிதைக்கு அழகைத் தருவன. அந்த அழகு படிப்போரின் உள்ளத்தைக் கவர்ந்து நெஞ்சை உருக்கவைப்பதாக உள்ளது. உள்ளத்தை உருக்கும் மெய்ப்பாடுகளுள் அழுகை என்ற மெய்ப்பாட்டினை மாணிக்கவாசகர் எவ்வாறு பயன்படுத்தியுள்ளார் என்பதனை எடுத்துக் காட்டுவதே இவ்வாய்வின் நோக்கமாகும். விபரண முறை, பகுப்பாய்வு முறை ஆகிய அணுகுமுறைகளில் இந்த ஆய்வானது மேற்கொள்ளப்பட்டு ஆய்வுமுடிவுகள் பெறப்பட்டன. இவ்வகையில் திருவாசகத்தில் மாணிக்கவாசகர் தமது பக்தி வைராக்கிய நிலையினை வெளிப்படுத்தும் விதமாக மெய்ப்பாட்டினை ஓர் உத்தியாகக் கையாண்டுள்ளார். மெய்ப்பாட்டியலில் ஒன்றாகிய அழுகை என்பது பக்திப் பாடல்களில் துன்பத்தின் வெளிப்பாடன்று. இறையருளை முழுமையாகப் பருக நினைக்கும் போது அடியவர்களது உள்ளத்து உணர்வாக அழுகை என்னும் உணர்ச்சி வெளிவருகின்றமையினைக் கண்டுகொள்ளக் கூடியதாகவுள்ளது. தொல்காப்பியர் கூறிய அழுகையெனும் மெய்ப்பாட்டையும் அது தோன்றுவதற்கான நிலைக்களன்களையும் திருவாசகப்பாடல்களில் மாணிக்கவாசகர் பயன்படுத்தியதோடு அவற்றை இன்னும் விரிந்த தளத்திற்கு இட்டுச்சென்றுள்ளமையை இவ்வாய்வின் வழி கண்டுணரமுடிகிறது.
</description>
<pubDate>Sat, 01 Jan 2022 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9409</guid>
<dc:date>2022-01-01T00:00:00Z</dc:date>
</item>
</channel>
</rss>
