<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rdf:RDF xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#" xmlns="http://purl.org/rss/1.0/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
  <channel rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11878">
    <title>DSpace Collection:</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11878</link>
    <description />
    <items>
      <rdf:Seq>
        <rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12025" />
        <rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12024" />
        <rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12023" />
        <rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12022" />
      </rdf:Seq>
    </items>
    <dc:date>2026-02-21T12:44:41Z</dc:date>
  </channel>
  <item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12025">
    <title>மத்திய கால அரங்கின் ஊடாக கத்தோலிக்கத் திருச்சபை முன்னெடுத்த மனிதநேயம்</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12025</link>
    <description>Title: மத்திய கால அரங்கின் ஊடாக கத்தோலிக்கத் திருச்சபை முன்னெடுத்த மனிதநேயம்
Authors: Divya, V.
Abstract: ஐரோப்பிய அரங்க வரலாற்றின் கத்தோலிக்கத் திருச்சபையின் செல்வாக்கிற்கு உட்பட்ட காலப்பகுதியான மத்தியகாலத்தை மையப்படுத்தியதாக முன்னெடுக்கப்படுகிறது. மத்தியகால அரங்கில் கத்தோலிக்கத் திருச்சபையின் தேவாலய பூசை நடைமுறைகளும், அதன் ஊடாக மேற்கிளம்பிய சமயம் சார்ந்த நாடக வடிவங்களும், அவற்றின் நிகழ்த்துகை முறைமையும், நிகழ்த்துகை முறைமைக்கு அடிப்படையாக அமைந்த கருப்பொருளும் புதியதோர் கிறிஸ்தவ மனிதநேயப் பண்பாட்டை கட்டியெழுப்புவதற்கு எந்தளவு தூரம் பயன்பட்டன? என்பது இந்த ஆய்வில் ஆராயப்படுகின்றது. ஆரம்பகால அரங்க நடவடிக்கைகளின் மோசமான இழிநிலையின் சுவடுகள் உரோம அரங்கில் காணப்பட்டிருந்தன. இவ்வேளையில் கத்தோலிக்கத் திருச்சபை அரங்கில் காணப்பட்ட மனிதநேயமற்ற நடவடிக்கைகளை தடைசெய்வதற்கு எந்தளவில் உதவியது? என்பதே இங்கு ஆராயப்படுகின்றது. ஆரம்பகால கத்தோலிக்கத் திருச்சபையின் பூசைகள் இலத்தீன் மொழியில் நிகழ்த்தப்பட்டன. இந்த வகையில் தனது பூசை நடவடிக்கைகளில் அரங்கை இணைத்துக் கொண்டதன் மூலம் மக்களை அரங்க வாழ்வின் ஊடாக சமய வாழ்விற்கு இணைப்பதற்கான ஒரு பண்பாட்டிற்கான அழைப்பை எவ்வாறு மேற்கொள்ளுகின்றது? என்று இந்த ஆய்வு அனுகுகின்றது.&#xD;
கத்தோலிக்கத் திருச்சபை நிறுவன ரீதியாக ஐரோப்பிய நாடுகளில் வளர்ச்சியடைந்த காலத்தில் மொழி, இன, நாடு ரீதியான வேறுபாடுகளைத் தவிர்த்து அனைவரும் கிறிஸ்தவர் எனும் புதிய சமூகக் கட்டமைப்பை உருவாக்கும் வகையில் கத்தோலிக்கத் திருச்சபை அரங்கை எவ்வாறு கையாண்டது? என்பது தொடர்பாகவும் இந்த ஆய்வில் நோக்கப்படுகின்றது. சமூகத்தின் ஒவ்வொரு துறைகளிலும் இயங்குபவர்கள் சமூகப் பொறுப்புணர்வு மிக்கவர்களாக இயங்குவது எதிர்பார்க்கப்படுகிறது. இந்தவகையில் கத்தோலிக்கத் தேவாலயங்களை விட்டு நாடகங்கள் வெளியேற்றப்பட்டாலும் திருச்சபை நாடகக் குழுக்களை சமூகப் பொறுப்புணர்வுடன் இயங்குவதற்கும் எவ்வளவு தூரம் கரிசனை கொண்டிருந்தது? என்றும் இங்கு ஆராயப்படுகின்றது. கிறிஸ்தவ நாடக இலக்கியம், கிறிஸ்தவ ஆற்றுகை மரபு எவ்வாறு தோன்றியது? என்பதும் திருச்சபை அந்த தோற்றத்தில் எந்தளவு பங்கு கொண்டிருந்தது? என்பதும் இவற்றின் மூலம் இறையியல் கருத்துக்கள் மக்களுக்கு எந்தளவு தூரம் பயன்பாடு உடையனவாக அமைந்தது? என்பதும் இங்கு நோக்கப்படுகிறது.&#xD;
இறையியல் கருத்துக்களை முன்னெடுப்பதனை நோக்காகக் கொண்டிருந்த அரங்க நடவடிக்கைகள் மனிதநேயத்தையும், புதிய பண்பாட்டிற்கான அழைப்பையும், புதிய சமூகக் கட்டமைப்பையும், சமூகப் பொறுப்புணர்வையும், தமது நாடக வடிவங்களான மறைபொருள் நாடகம், ஒழுக்கப்பண்பு நாடகம், அற்புத நாடகங்கள் மூலம் எவ்வாறு வளர்த்தெடுத்தது? என்று இங்கு நோக்கப்படுகின்றது. ஐரோப்பிய அரங்க வரலாற்றில் கத்தோலிக்கத் திருச்சபை சமயம் சார்ந்து அரங்க நடவடிக்கையை முன்னெடுத்த போதிலும் ஏனைய காலப்பகுதியிலும் பார்க்க இக் காலப்பகுதியானது எந்தவகையில் முதன்மை பெறுகிறது? அரங்கிற்கான தேடலின் பண்பாட்டு பின்புலம் யாது?, இதன் மூலம் உருவாகிய பண்பாட்டின் அசைவு யாது? அந்தப் பண்பாடு மனித நேயத்துடன் முன்னெடுக்கப்பட்டதா? என்பதும் இந்த ஆய்வில் கண்டறியப்படுகிறது. இந்த ஆய்வு வரலாற்றுப் பண்பு கொண்ட விபரிப்பு ஆய்வாக அமைகிறது. ஆவணங்களைப் பரிசீலித்தல் என்ற முறையின் ஊடாகவும் இக் கட்டுரையானது அமைகின்றது.</description>
    <dc:date>2018-01-01T00:00:00Z</dc:date>
  </item>
  <item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12024">
    <title>மனித பண்பாட்டு விருத்தியில் ஈழத்துக் கிறித்தவ இலக்கியமான ஞானப்பள்ளு</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12024</link>
    <description>Title: மனித பண்பாட்டு விருத்தியில் ஈழத்துக் கிறித்தவ இலக்கியமான ஞானப்பள்ளு
Authors: Siddhanthan, K.
Abstract: இலக்கியம் 'இலக்கு' என்பதனை அடிப்படையாகக் கொண்டது. எமது வாழ்வின் நோக்கம் துன்பங்களில் இருந்து விடுதலை பெறுவதாகும். அந்த விடுதலை இறுதியில் இறைவனை அடைவதாகவும் சொல்லப்படும் இந்த ஆன்ம விடுதலைக்கான உயரிய நெறியைச் சாதாரண மக்களுக்கு ஏற்ற வகையிலே இலக்கியச்சுவை கலந்து கூறுகின்ற பொழுது அதனை மக்கள் விரும்பிப்படித்து அதன் வழி நடந்து உயரிய நிலையை எய்துவர் இவற்றை ஈழத்துப் புலமையாளர் ஒருவர் தாம் சார்ந்திருந்த கத்தோலிக்க கிறிஸ்தவ சமயநெறியில் நின்று விளக்கிக் காட்ட முனைந்திருக்கின்றார். போர்த்துக்கீசர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலப்பகுதியான கி. பி.1621 – 1658 இல் வாழ்ந்திருக்கிறார். வண. சுவாமி ஞானப்பிரகாசர் இந்த இலக்கியம் எழுந்த காலத்தை கி.பி.1642 என்று பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றார். பெயர் குறிப்பிடப்படாத இந்த ஞானப்பள்ளுவின் ஆசிரியர் தன்புகழை விரும்பாத பரந்த நோக்கம் கொண்டவராக இருந்திருக்கிறார். அவரது நோக்கம் அல்லற்படுகின்ற மக்களை கிறிஸ்தவ இறையருளை முன்னிறுத்தி மேநிலை அடையச் செய்வதே ஆகும். அதற்காக அவர் பெருங் காவியங்கள், புராணங்கள் முதலான பாரம்பரிய இலக்கிய வடிவங்களைத் தேர்ந்தெடுக்காது, சாதாரணமான பொதுமக்களுக்கு ஏற்றதான இலக்கிய வடிவங்களில் ஒன்றான 'பள்ளு' என்று சொல்லப் பெறுகின்ற சிற்றிலக்கிய வடிவத்தைத் தேர்ந்தெடுத்தார். பள்ளு, குறவஞ்சி முதலான சிற்றிலக்கிய வடிவங்கள் 19ம், 20ம் நூற்றாண்டில் தோன்றிய நவீன இலக்கிய வடிவங்களிற்கு முன்னோடி என்று கூறப்படுகின்றது. நவீன இலக்கிய வடிவங்களில் பொது மக்களுடைய நலன்கள் பிரதானமான இடத்தைப் பெறுகின்றன. சமூகத்தில் பெரும்பான்மையினரான பொதுமக்கள் மீது மிகுந்த கரிசணை கொண்டவர்களாக ஐரோப்பியர்கள் இருந்திருக்கிறார்கள். இந்த ஐரோப்பியர்களின் தொடக்க காலத்தைச் சேர்ந்தவர்களாக இலங்கையிலே போர்த்துக்கேயர்கள் விளங்கி இருக்கிறார்கள். தமிழ் நாட்டிலே நாயக்கர் ஆட்சிபுரிந்த காலத்திலே யாழ்ப்பாணத்திலே போர்த்துக்கேயர் ஆட்சி செய்திருக்கிறார்கள். அவர்கள் பல்வேறு வகையான பாடசாலைகளை நிறுவி கல்விப்பணி புரிந்திருக்கிறார்கள். அவர்களது கல்வி நிறுவனங்களில் ஒன்றாக பரிஷ் என்று சொல்லப்பெறுகின்ற ஆரம்ப பாடசாலைகளில் சுதேச மொழிகளைக் கற்பித்திருக்கிறார்கள். எனவே அவர்களின் கல்விப்பணி சமூகத்தின் அடிமட்ட நிலையிலுள்ள மக்களில் இருந்து கல்லூரிக்கல்வியினை நோக்கியதான வளர்ச்சியைக் கொண்டதாக அமைந்திருக்கின்றது. மக்களின் உண்மையான கல்வி வளர்ச்சி என்பது மரபினை மீறியதாத இருந்து விட முடியாது. மரபினைத்தழுவியே செல்வதுதான் பயன்உறுதி மிக்கதாக இருக்கும். தமிழருடைய தமிழ்க் கல்விப்பாரம்பரியத்திலே இலக்கியக்களிற்கு முக்கியமான இடம் இருக்கின்றது.&#xD;
இலக்கியங்கள் பண்டு தொட்டு இன்று வரை அவர்களுடைய கல்வி அறிவை விருத்தி செய்து அவர்களை நன்நெறிப்படுத்தி இருக்கின்றது. காலத்திற்குக்காலம் தோன்றிய தமிழ்ப்புலமையாளர்கள் முன்னோர்ப் மொழிபொருளைப் பொன்னேபோல் போற்றி இருக்கிறார்கள். இந்த வகையில் இலங்கையின் போர்த்துக்கேயர் காலத்தைச் சேர்ந்த புலவர் ஒருவர் நமக்கு முன்னர் ஈழத்திலே தோன்றிய இலக்கிய வடிவமான 'பள்ளு' என்பதனை தேர்ந்தெடுத்து இலக்கியம் செய்திருக்கிறார். இலங்கையில் தோன்றிய ஞானப்பள்ளுவிற்கு முன்னோடியான பெருமை கதிரைமலைப்பள்ளு என்பதாகக் கூறப்படுகின்றது. இந்த கதிரைமலைப்பள்ளுவின் ஆசிரியர் பெயரும் அறியுமாறில்லை. கதிரைமலைப்பள்ளுவின் பாட்டுடைத்தலைவர் கதிர்காமவேலவர் ஆவார். எனவே அந்தப்பள்ளுவின் வழியிலே ஞானப்பள்ளுவின் பாட்டுடைத் தலைவராக ஜேசுக் கிறிஸ்து நாதரை ஞானப்பள்ளுவின் ஆசிரியர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்து சமயத்திலே சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று படிநிலைகள் பற்றிப்பேசப்படுகின்றது. இவற்றிலே ஞானந்தான் உயர்ந்தது. கிறிஸ்தவ சமயத்திலே 'ஞானம்' என்பது மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. அது அல்லல்படுகின்ற மக்களிற்கு ஒளியாக விளங்குவது. ஞான ஒளி என்று கிறிஸ்தவர் இதனைக் கூறுவார்கள். ஞானப்பள்ளுவில் ஞானமே முன்னிறுத்தப்படுகின்றது. மக்கள் வாழ்க்கை இன்பதுன்பங்களை உள்ளடக்கியது. வாழ்க்கையை நிராகரித்தும் ஞானநெறியைக் காட்டுகின்ற சமயங்கள் உள்ளன. உண்மையான சமயம் என்பது வாழ்க்கை பற்றிய நோக்கையும் வாழும் நெறியினையும் கொண்டதாக அமைதல் வேண்டும். ஞானப்பள்ளு இலக்கியத்தைப் படிப்பவர்கள் அதில் இவ்விரண்டு அம்சங்களும் போதிந்துள்ளமையை உணரத்தவரார். தமிழில் எழுந்த இலக்கியங்கள் பல உணர்வும் அறிவும் கலந்தனவாகக் காணப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் இலக்கியங்களில் உணர்ச்சி என்பது கூடுதலான பங்கை வகிக்கக் காண்கிறோம். ஆனால் ஞானப்பள்ளு அவ்வாறான ஒன்றல்ல. உணர்வின் வழி நடப்பவர்களுக்கு வாழ்க்கை ஒரு 'சோக நாடகம்' என்பதனையும் அறிவின் வழிநடப்பவர்களுக்கு அது ஒரு பயன்மிக்க நாடகம் என்பதனையும் ஞானப்பள்ளு ஆசிரியர் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார் என்பது அதனை முழுமையான படிப்பவர்களிற்கு விளங்கும். ஞானப்பள்ளிலே சிருங்காரம் என்று சொல்லப்படுகின்ற உவகைச்சுவையிலும் பார்க்க அறிவிற்கும் மேம்பட்டதான ஞானம் என்பது முக்கியத்துவப் படுத்தப்படுவதனைக் காண்கின்றோம். இதிலே இடம்பெறுகின்ற 'அறிவுறுத்தல்' எனும் பகுதிகள் எமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.</description>
    <dc:date>2018-01-01T00:00:00Z</dc:date>
  </item>
  <item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12023">
    <title>மத நல்லிணக்கத்திற்கு அடித்தளமாகும் மனிதநேயப் பண்பாடு: தாயுமானவர் சுவாமிகளின் படைப்புகள் ஊடான பார்வை</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12023</link>
    <description>Title: மத நல்லிணக்கத்திற்கு அடித்தளமாகும் மனிதநேயப் பண்பாடு: தாயுமானவர் சுவாமிகளின் படைப்புகள் ஊடான பார்வை
Authors: Swaminatha Sharma, K.
Abstract: பல வழிகளிலும் வளர்ச்சி காணும் உலகில் மிக முக்கியமான ஒரு விடயம் எதிர்பார்த்த அளவு அல்லது வேண்டிய அளவு வளர்ச்சி காணவில்லை அது மனிதநேயப் பண்பாடு ஆகும். காலவோட்டத்தில் இயந்திரமாக இயங்கும் மனிதர்களிடையே அருகிப் போயிருக்கின்ற மனிதநேயப் பண்பாட்டை அழுத்திக் கூறுவதும் காலாதிகாலமாக சொல்வடிவில் இருந்து வரக்கூடிய மனிதநேயப் பண்பாட்டை புதியதோர் பண்பாட்டை நோக்கி சுட்டுவதும் இவ்வாய்வின் நோக்கமாகும். புதியதோர் கிறிஸ்தவ மனிதநேயப் பண்பாட்டை நோக்கி என்ற மையக்கருத்தின் அடிப்படையில் "மதநல்லிணக்கத்துக்கு அடித்தளமாகும் மனித நேயப்பண்பாடு: தாயுமானவர் சுவாமிகளின் படைப்புக்கள் ஊடான பார்வை" என்றவாறு இந்த ஆய்வு அமைகிறது. அவ்வகையில் இன்றும் கூட வாழும் மதங்கள் உள்ளிட்ட ஏனைய, பண்டைய மதங்கள் தனித்தனி திசையில் மனிதர்களுக்கு வழிகாட்டி நிற்கின்றன. இன்றைய மனித வாழ்வியலில் இது ஏற்படுத்தும் விளைவு மதநல்லிணக்கத்தை சிந்திக்க தூண்டுகிறது. அறிவு கூர்மையாக்கப்படுகின்ற இக்காலத்தில் சமய உணர்வும் கூர்மையாக்கப்பட வேண்டும். இதனால் சமயங்களில் அடிநாதமான மனிதநேயப் பண்பாடு கோட்பாட்டு நிலையைக் கடந்து செயல் வடிவம் பெறவேண்டும். தொல்காப்பியம், சங்க இலக்கியங்களான திருமுருகாற்றுப்படை, அகநானூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, சங்கம் மருவிய கால இலக்கியங்களான மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய பண்டைத்தமிழ் இலக்கியங்கள் அக்காலத்திலேயே சமயம், சமயப்பண்பாடு. இறைவழிபாட்டுத் தன்மை, இயற்கையை வழிபடும் நிலை என்பவற்றை வெளிப்படுத்தி உள்ளன. இதுபோல மேற்குலக மற்றும் கீழைத்தேச அறிஞர்கள் பலரும் மதம், சமயம் என்பன பற்றி விளக்கி இவற்றிற்கு இடையேயான வேறுபாடுகளையும் குறிப்பிட்டு உள்ளனர். சொற்பதங்களின் பொருளுக்கு அப்பால் காலப்போக்கில் பக்குவம் இன்மை கொண்ட சில பின்பற்றாளர்கள், தவறான அர்த்தப்படுத்தல்களினால் பகை முரண்பாடுகள் மதங்களுக்கிடையே உருவாகின. இதனால் மனிதனை உய்விக்க தோன்றிய மதங்கள் இடையே முரண்பாடுகள் வலுத்தன. இதனை உணர்ந்த உலகம் மத நல்லிணக்கத்தை வேண்டிநின்றது. உருவம், பெயர், மொழி, இனம் போன்ற தனிக்கூறுகள் கடந்த ஒத்த பண்புகளில் சந்திப்பதாகிய மதநல்லிணக்கக் கூறுகள் எல்லா மதங்களிலும் உள்ளன. மன்னித்தல், பொறுமை, சகோதரத்துவம், தியாக மனப்பாங்கு என மதங்கள் கூறும் நல்லுணர்வுகளை வெளிக்கொண்டு வந்தால் மதநல்லிணக்கம் கைகூடும். சகல மதங்களிலும் சமயப்பொருண்மை இலக்கியங்கள் ஊடாகவே பிரதானமாக வெளிப்படுத்தப் பட்டுள்ளன. அவ்வகையில் &#xD;
இந்து சமயத்தின்கண் தோன்றிய சமயவாதிகளில் ஒருவரான தாயுமானவர் சுவாமிகளின் பாடல்கள் மேற்குறித்த உருவம்,பெயர்,மொழி,இனம் போன்ற தனிக்கூறுகள் கடந்த ஒத்த பண்புகளைக் கொண்டு மதநல்லிணக்கத்திற்கு அடிப்படை ஆகின்ற மனிதநேயத்தை வலியுறுத்தி இருத்தல் காணலாம். அன்புசெலுத்துதல், மற்றவர்களுக்காக பிரார்த்தித்தல் தொடக்கம் மனங்கடந்த நிலைவரை தாயுமானவர் குறிப்பிடும் விடயங்கள் மகச்சிறந்த மதநல்லிணக்க அடிப்படைகள். எம்மதத்திலும் ஏற்றுக்கொள்ளுமாறான மனிதநேயப் பண்பாடு இவர் பாடல்களில் அதிகமாக உள்ளன. எனக்கு அல்ல எமக்கு என்று இன்று காணும் தத்துவத்தை அன்றைக்கே பாடியவர் தாயுமானர் சுவாமிகள். அனைவருக்குமான பிரார்த்தனை என்பது அதுவே. பல முகங்கள் கொண்ட அன்புடமையில் ஒருமுகம் கொல்லாமை இன்னொரு முகம் எல்லாவற்றிலும் இறைவனைக் காணுதல். இவ்விடயங்களில் தாயுமானவர் சுவாமிகள் பாடல்கள் சிறந்த மனப்பதிவை உண்டாக்குவனவாக காணப்படுகின்றன. பரிபூரண ஆனந்தம், பராபரம்,பரஞ்சோதி முதலிய மனித உணர்வை வெல்லுகின்ற சொற்பிரயோகங்கள் ஊடாக மன நெகிழ்ச்சி, மனப்பக்குவம் உண்டாகத் தக்க முறையில் இவர் பாடிய பாடல்கள் சிறப்பிடம் பெறுகின்றன. எம்மதத்திற்குரியது என்று விடைகாண முடியாத திருக்குறள் வலியுறுத்துகின்ற கருத்துக்கள், சைவத்தின் தமிழ் ஆகமமாக விளங்கும் திருமந்திரம் குறிப்பிடும் கருத்துக்கள் தாயுமானவர் சுவாமிகள் பாடலில் வெளிப்படுகின்றமையைக் காணலாம். ஆனால் பல்லவர்கால சைவத்திருமுறைகள், திவ்வியப்பிரபந்த பாக்கள் முதலியவற்றின் வெளிப்படையான தாக்கங்கள் சொல்லும் அளவிற்கு இல்லை. திருமுறைகளும், திவ்வியப்பிரபந்தமும் உருவம்,நாமம், வரலாறு, அருமை பெருமை பற்றி அதிகம் பேசின. இவ்விடத்தில் மத நல்லிணக்கம் எனவரும்போது தாயுமானவர் சுவாமிகள் படைப்புக்கள் தனித்துவம் பெறுதல் வெளிப்படையாகத் தெரிகிறது. அவர் பாடல்களில் வரும் கருத்துக்களை திருவிவிலியம், திருக்குரரான் ஆகியநுர்ல்களிலும் காணமுடியும் அவ்வகையில் தாயுமானவர் சுவாமிகளின் படைப்புக்கள் மதநல்லிணக்கத்திற்கு அடித்தளமாகுவதில் காத்திரமான பங்கைப் பெறுகிறது என்பது தெளிவு.</description>
    <dc:date>2018-01-01T00:00:00Z</dc:date>
  </item>
  <item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12022">
    <title>மனித நேய பண்புகளை பிரதிபலிக்கும் திருமறைக்கலாமன்றத்தின் திருப்பாடுகளின் ஆற்றுகைகள்</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12022</link>
    <description>Title: மனித நேய பண்புகளை பிரதிபலிக்கும் திருமறைக்கலாமன்றத்தின் திருப்பாடுகளின் ஆற்றுகைகள்
Authors: Rajkumar, J.Y.
Abstract: கடந்த அரைநூற்றண்டுகளாக இம்மண்ணில் இயங்கி வருகின்ற திருமறைக் கலாமன்றமானது பல்வேறு கலை இலக்கியப் பணிகளையும் சமூக மேம்பாட்டுப்பணிகளையும் ஆற்றி வருகின்றது. அப்பணிகளில் ஒன்றாக இறைமகன் இயேசுவின் 'திருப்பாடுகளின் காட்சி' எனப்படுகின்ற நாடக மரபினை கடந்த 54 வருடங்களாக நிகழ்த்தி வருகின்றது. அதனை உயர்ந்த கலைப் பெறுமானத்துக்குரியதாக வளர்த்து வந்திருக்கின்ற அதே வேளையில் அப்படைப்பினை சடங்குப் பண்புகளுக்கப்பால் காலச் சூழமைவுகளுக்கமைய பல்வேறு சமூக விடுதலை பற்றியதும் மனிதத்துவ விழுமியங்கள் பற்றியதுமானதான சிந்தனைகளை வெளிப்படுத்தும் ஊடகமாகவும் மாற்றியிருக்கின்றது. திருப்பாடுகளின் நாடக மரபினை வெறுமனே பக்தி நிகழ்வாகப் பார்ப்போர்கள் அதன் தொடர்புக் காத்திரத்தினையும் மனித நேயவெளிப்பாட்டினையும் சமகாலத்துக்கான அதன் முக்கியத்துவத்தினையும் நோக்குவதாகத் தெரியவில்லை. அதனால் இக்கட்டுரை திருப்பாடுகளின் ஆற்கைகளின் பயன் பாட்டினை ஆய்வு செய்ய முற்படுகின்றது. திருப்பாடுகளின் நாடக மரபானது மத்திய கால ஐரோப்பாவில் தோற்றம் பெற்றது. கிறிஸ்தவர்களின் தவக்காலப்பகுதியில் இயேசுவின் பாடுகள் மரணத்தினை தரிசித்து, தியானித்து மனந்திரும்புவதற்கான பக்திச்சடங்காக நிகழ்த்தப்படுவது. ஈழத்தில் ஆரம்பத்தில் பாவைகளைக் கொண்டு நிகழ்த்தப்படும் (உடக்குப்பாஸ்) ஆற்றுகை மரபாக காணப்பட்டது. 1952 ஆம் ஆண்டுக்குப் பின்னரே மனிதர்கள் நடிக்கின்ற நாடக மரபாக முதலில் ஆங்கிலத்திலும் பின்னர் மொழிபெயர்க்கப்பட்டு தமிழிலும் அறிமுகமாகியது. 1964 ஆம் ஆண்டிலிருந்து அருட்திரு நீ. மரியசேவியர் அடிகள், திருப்பாடுகளின் நாடகங்களை தமிழுக்குரியதான பிரதிகளாக புதிதாக எழுதி மேடையேற்றத் தொடங்கினார். அதனை கிரமமாக செய்வதற்காக திருமறைக் கலாமன்றம் என்ற அமைப்பினை உருவாக்கி இன்று 50 வருடங்களுக்கு மேலாக இக்கலை மரபினை மெருகேற்றி மேடையேற்றி வருகின்றார். யாழ்பாணத்தில் மட்டுமன்றி இலங்கையின் பல பாகங்களிலும் நாடு கடந்து ஐரோப்பிய நாடுகளிலும் அவரால் உருவாக்கப்பட்ட பாரம்பரியம் நீட்சி பெற்றுள்ளது. இந்த வளர்ச்சியானது ஒரு பக்தி நிகழ்வு என்பதனை தாண்டி கலைத்துவ அம்சங்கள் அனைத்தும் நிறைந்த கலைமரபாக வளர்ச்சிபெற்றுள்ள அதே வேளையில், 'நாடகம் வாழ்வைப் பிரதிபலிக்கும் கலை' என்பதற்கொப்ப சமகால வாழ்வியலோடு இணைந்த வடிவமாகவும் வளர்ந்து வந்துள்ளது. அதனையே இக்கட்டுரை ஆய்வுசெய்கின்றது. குறிப்பாக தொண்ணூறுகளில் இருந்து திருமறைக் கலாமன்றம் சமகால விடயங்களையும் இடர்மிகுந்த போர்க்காலத்தின் சோகங்களையும் இயேசுவின் பாடுகள் மரணத்துடன் இணைத்து பல்வேறு கோணங்களில் பார்க்கின்ற புதிய நாடகங்களை எழுதியும் தயாரித்தும் மேடையேற்றி வருகின்றது. குறிப்பாக சிலுவை உலா, பலிக்கும், கல்வாரிக்கலம்பகம், கல்வாரி சுவடுகள், குருதி கழுவியஸகுவலயம், சிலுவை சுவடுகள், காவிய நாயகன் கல்வாரி யாகம் மலையில் வீழ்ந்த துளிகள் கடவுள் வடித்த கண்ணீர் வேள்வித் திருமகன் வெள்ளியில் ஞாயிறுபோன்ற பல நாடக ஆற்றுகைகளை இதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். கலைத்துவ ரீதியாகவும் இவ்வடிவம் உலகத் தரத்தினை நோக்கிய அரங்க வடிவமாக மாறி வருகின்றது. எனவே இச்செயற்பாடுகள் முறையான ஆய்வுக்குட்படுத்தப்படுவதும், அவற்றின் பயன்கள் ஆராயப்படுவதம். இக்கலைமரபினது தாக்கவன்மை உணர்த்தப்படுவதும் எதிர்கால சமூகத்திற்கு பயன்மிக்கதாக அமையும். திருமறைக்கலாமன்றத்தின் தொண்ணூறுகளுக்குப் பின்னான திருப்பாடுகளின் ஆற்றுகைகளை ஆய்வு செய்கின்ற போது கடந்த முப்பது வருட போர்க்காலத்தில் குறிப்பாக இருபது வருடத்திற்கு மேற்பட்ட இன்னல்கள் மிகுந்த காலத்தில், போர், உயிரிழப்புக்கள், அச்சம் நிறைந்த வாழ்வு, உடமை இழப்புக்கள், இடப்பெயர்வுகள், அங்கவினம், அகதி வாழ்வு, என்ற சொல்லொணா துயர்மிகுந்த போராட்ட வாழ்வின் சூழமையில் திருமறைக் கலாமன்றம் மேற்கொண்ட திருப்பாடுகளின் நாடகங்கள் தனியே இயேசுவின் பாடுகள் மரணம் உயிர்ப்பு என்ற சடங்கு வழி சுரங்களாக மட்டும். இல்லாது மனிதத்துவத்தின் துயர்களை எடுத்துச் சொல்லும் ஊடகமாகவும் அவற்றினை கிறிஸ்துவின் பாடுகளுடன் இணைத்து தொடர்புபடுத்தி ஆற்றுப்படுத்தும் கருவியாகவும் பயன்படுத்தி வந்துள்ளது. போர்க்காலத்தில் மக்கள் அனுபவித்த துயரத்தில் அவர்களை ஆற்றுப்படுத்தும் பணியாகவும், உண்மைக்கு குரல் கொடுப்பதாகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலாகவும், பிறரன்பு, தியாகம், போன்றவற்றின் பெறுமதியை உணர்த்தியும், மனித உரிமைகள் குறிப்பாக பெண்ணுரிமை, சிறுவர் உரிமை போன்ற மனிதநேயத்தின் கூறுகளை வலியுறுத்தியும் வந்துள்ளது. இதனை பல பத்திரிகை விமர்சனங்களில் இருந்து அறியக் கூடியதாகவுள்ளது. அதனால் கிறிஸ்தவ மக்கள் மட்டுமன்றி பிறசமய சகோதரர்களும் இந் நாடகங்களுக்கு விரும்பி வந்து பார்வையிடும் பாரம்பரியம் உருவாகியுள்ளது. எனவே கிறிஸ்தவர்களின் சடங்காகவும் கலைமரபாகவும் காணப்படுகின்ற திருப்பாடுகளின் நாடகங்கள் சமூக நடவடிக்கையாகவும் ஆற்றுப்படுத்தும் ஊடகமாகவும் பயன்படமுடியும் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. அந் நாடகங்களுக்கூடாக இறைமகன் இயோ வாழ்ந்து வெளிப்படுத்திய மனிதநேய பண்புகளை தாக்கவள்மையுள்ள நிகழ்த்திக்காட்டலூடாக வெளிப்படுத்தி, காலத்துக்கு ஏற்ற வகையில் அதனை சிந்திப்பதற்கும். ஒப்பு நோக்குவதற்கும் செய்துள்ளது. சமகால மனிதரில் வளர்க்கப்பட வேண்டிய பிறரன்பு, தியாகம் உண்மைக்காக குரல் கொடுத்தல், விழிம்பு நிலை மக்களுக்கு உதவுதல், துயருறுவோரை ஆற்றுப்படுத்துதல், பெண்கள் சிறுவர்களில் விசேட தலனம் கொள்ளுதல் என பல்வேறுபட்ட விடயங்களையும் வலுப்படுத்தி புதியதோர் கிறிஸ்தவ மனித நேயப்பணியாட்டை நோக்கிச் செல்வதற்கும் வழிகாட்டி உள்ளது. அது சமயங் கடந்தும் வரவேற்கப்படுவதானது அதன் பயனை மேலும் அதிகரித்துள்ளது.</description>
    <dc:date>2018-01-01T00:00:00Z</dc:date>
  </item>
</rdf:RDF>

